Tuesday, December 29, 2009

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்...

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.

எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!


பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.

தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.

வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

Wednesday, June 24, 2009

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடைய கோனே

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ


பாடலை இங்கே கேட்கலாம்

திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: G V பிரகாஷ்
இயற்றியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்

Sunday, May 24, 2009

காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி


பங்குனிப் பெருவிழாவின் போது மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளும் அந்த அழகைக் கண்டு பாபனாசம் சிவன் அவர்கள் " காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாடிய அந்த சௌந்தர்யத்தை அந்த அதிகார நந்தி வாகனத்தின் தாத்பரியத்தை இக்கட்டுரையில் காண்போம் மற்றும் அந்த பாடலை கேட்போம்.


ஒரு நந்தி தனில் இவர்ந்து ஒரு நந்தி தலைச் சூடி உலகமெல்லாம்
தரு நந்தி உமையுடனே சார்ந்த பெரும் கயிலைதனில் காவல் பூண்டே
கரு நந்தி இட அருள்வான் கர நான்கும் கண் மூன்றும் கலந்த ஞானத்
திரு நந்தி தலைவன் உயர் சிவாகமங்கள் ஓர்ந்தானை சிந்தை செய்வாம்.



பொருள்: நந்தியாகிய இடப வாகனத்தில் அமர்ந்து, பாம்பை தலையில் சூடி, உலகிலுள்ளவர்களூக்கெல்லாம் நன்மையைத் தந்து உமா தேவியாருடன் இருக்கும் சிவபெருமானின் கயிலை மலைக்கு காவலனாக இருக்கும் அதிகார நந்தி தேவர், நான்கு தோள்களும், மூன்று கண்ணும் கொண்டவராக உள்ளார். சிவபெருமானிடமிருந்து ஆகமங்களை அறிந்து உலகிற்கு ஞானம் வழங்கிய அந்த நந்தி தேவரை சிந்தை செய்வோம் என்று புலியூர்ப் புராணம் அதிகார நந்தி தேவரின் புகழைக் கூறுகின்றது.

கபாலீஸ்வரரின் அதிகார நந்தி சேவை முன்னழகும் பின்னழகும்

சிவபெருமானைப் காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி போற்றி வணங்கி, அந்த காருண்ய மூர்த்தியைப் போலவே சாரூப நிலை பெற்றவர்கள் அனேகராவர். இவர்கள் முக்கண் சுடர் விருந்தினைப் போலவே தலையில் ஜடாமகுடமும் அதில் தாரமர் கொன்றையும், ஊமத்தையும், சந்திரப்பிறையும் தாங்கும் பேறு பெற்றவர்கள். நான்கு கரங்கள் கொண்டு மேற்கரங்களில் மான், மழு ஏந்துபவர்கள். இவர்களில் முதன்மையானவர், எம்பெருமானின் முழு முதல் தொண்டரான நந்தியம்பெருமான் ஆவார். அப்போது அவர் அதிகார நந்தி என்று வழங்கப்படுகிறார். இவர் சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும், வெண்மை நிறமும் கொண்டவர். இறைவனின் ஞான வாளையும், பொற்பிரம்பையும் தாங்கி நிற்பவர். இவருடைய தேவியின் பெயர் சுயம்பிரபா என்பது ஆகும்.


நந்தி முகமும், மனித உடலும் கொண்டு , வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி மண்டியிட்ட நிலையில் கீழ் திருக் கரங்கள் இரண்டிலும் ஐயனின் பாதங்களைத் தாங்கி, நான்கு தோள்களிலும் எம்பெருமானை சோமாஸ்கந்தராக தாங்கி வீதி வலம் வருவது " அதிகார நந்தி சேவை " எனப்படுகின்றது. அதிகார நந்தி ஞானத்தின் திருவுருவம். நந்தீ என்பதற்கு வளர்வது என்று பொருள். நமது அறிவையும் செல்வத்தையும் வளர்ப்பவராக இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்தி என்ற பெயர் வழங்கப்படுகின்றது. நந்தி நாமம் நமச்சிவாயவே என்னும் தொடரும் இதனையே உணர்த்துகின்றது. அவர் தன் சார்பாக அறிவு செல்வம், இன்பம் ஆகியவற்றை தடையின்றி வழங்கும் அதிகாரத்தை நந்தியம்பெருமானுக்கு அளித்துள்ளார். அதிகாரம் பெற்ற வல்லமை மிக்க நந்தி தேவர் அதிகார நந்தி எனப்படுகின்றார்.
கந்தர்வி வாகனத்தில் கற்பகவல்லி


ந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர்

சோமஸ்கந்தர்


விரைமலர் குழல்வல்லி
மறைமலர் பத வல்லி
விமலி கற்பகவல்லியே

யோக சாஸ்திர பிரகாரம் அதிகார நந்தியின் விளக்கம், அதிகார நந்தி என்பது ஒரு உவமை மனிதனின் கபாலத்தில் மூளைக்கு நடுவில் இருக்கும் ( pineal gland) என்னும் சுரப்பியை குண்டலினி சக்தி அடையும் போது ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. காலம் தாண்டின அறிவு ஏற்படுகின்றது. உடம்பு வஜ்ரமாகின்றது. சித்தர்கள் இதை நந்தி என்று சொல்கின்றனர். இந்த உடலோடு ஆத்ம தரிசனம் அதாவது சிவ தரிசனம் அடைய நந்தியின் அனுமதி தேவை. அதற்குத்தான் சிவனை மனிதனுக்கு காட்டும் அதிகாரம் உள்ளது. இவ்வாறு உடலுக்குள் இருக்கிற ஆன்மாவே உலகமெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியிருப்பதை அந்த நந்தி காட்டுகின்றது. இறை அனுபவம் எளிதல்ல. மனிதான் யோகம் பயின்ற வஜ்ரம் போன்ற உடம்போடு கம்பீரமான பணிவோடு இடைவிடாத எருது உழைப்போடு முயன்றால், யோக வழியில் முயன்றால் நந்தி என்னும் சுரப்பி திறந்து தலைக்கு மேலே இறை தரிசனம் பெறலாம் என்பதை குறிப்பதே அதிகார நந்தி வாகனம் என்று ஆன்றோர்கள் இவ்வாகனத்தின் தாத்பரியத்தை விளக்குகின்றனர்.

வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர்




வெள்ளி மயிலை அதிகார நந்தியின் கண்ணில் இறைவனைத் தாங்குகின்ற பேறு பெற்றதின் மிகப் பெரிய சந்தோஷம் தெரியும். மண்டியிட்ட உடலில் பணிவு தெரியும்.பளபளப்பில் சுத்தம் தெரியும். உயரமும் அகலுமுமான உருவத்தில் உறுதி தெரியும். அதுபோல நாமும் உறுதி, சுத்தம், பணிவு, கனிவு கொள்ள வேண்டும் என்பதைத்தான் அதிகார நந்தி நமக்கு உணர்த்துகின்றதோ?

அதிகார நந்தி சேவை காண்பதால் தெளிந்த அறிவு, உடல் வலிமை, குறைவற்ற செல்வம், நிறைந்த மன மகிழ்ச்சி, சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு , பெரியோர்கள் நன்மதிப்பு முதலியன உண்டாகும்.




இசையில் மயங்கி பவனி வரும் சிங்கார வேலவர்




கயிலையே மயிலை எனப்படும் திருமயிலப்பூரிலே எம்பெருமான் உமையம்மையின் ஞானப்பாலுண்டு தீந்தமிழ் பதிகங்கள் பாடி இம்மயிலையிலேயே சாம்பரை அங்கம் பூம்பாவை ஆக்கிய ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தருக்கும் அவரது தந்தையாராம் சிவபாத இருதயருக்கும் அதிகார நந்தி சேவை அருளுகின்றார். சோமாஸ்கந்தராக வெள்ளி அதிகார நந்தியிலே ஈரேழு புவனங்களுக்கும் ஈசனான எம்பெருமான் செங்கோல் தாங்கியும், வெள்ளி மூஷிக வாகனத்திலே நர்த்தன வினாயகரும், கந்தர்வி வாகனத்திலே ஆடும் மயிலாய் அன்று இறைவனை அர்ச்சித்த கற்பக வல்லியும், கந்தர்வ வாகனத்திலே வள்ளி தேவசேனா சமேத சிங்கார வேலவரும், வெள்ளி இடப வாகனத்திலே சண்டிகேஸ்வரரும் அன்று சேவை சாதிக்கின்றனர். அதிகாலை 6 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பும் பஞ்ச மூர்த்திகள் 11 மணியளவில் திருக்குளத்தின் தென் மேற்கு மூலையில் உள்ள பந்தலில் வந்து தங்குகின்றனர், நாம் எல்லோரும் உய்ய சேவை சாதித்த பின் 1 மணி அளவில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 4 மணியளவில் திருக்கோவிலை அடைகின்றனர்.



கம்பீர திருமயிலை வெள்ளி அதிகார நந்தி

அதிகார நந்தி சேவை ஓவியம்

எம்பெருமானுக்கு நடனத்தின் போது மத்தளம் இசைப்பவர் நந்தியம்பெருமான், கந்தர்வர்களும் இசை மரபினர் ஆகவே இன்றைய தினம் ஒரே இசை மயம் தான், ஐயனை தோளிலே தாங்கி அன்பர்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து ஆடி வரும் அழகை எப்படி வர்ணிப்பது. நேரில் கண்டால் மட்டுமே அந்த தெய்வீக உணர்வைப் பெற முடியும். பாபநாசம் சிவன் அவர்கள் பக்திபரவசத்துடன் பாடிய பாடல் இதோ.

ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.

பல்லவி

காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)

அனுபல்லவி

மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்

மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி

வானமோ கமலவனமோ என மனம்

மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க

அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)

சரணம்

மாலோடு அயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி

கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்

காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடர கலைவாணி

திருவும் பணி கற்பகநாயகி வாமன்

அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)

(பாடலுக்கு நன்றி மௌலி மற்றும் ஜீவா வெங்கட்ராமன்)

Friday, May 22, 2009

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே


எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படி பாடினரோ)






டி.எம்.எஸ். குரலில்

இயற்றியவர்: கவியோகி திரு. சுத்தானந்த பாரதியார்
வயலினில் இசைத்தவர்: குன்னக்குடி திரு. வைத்தியநாதன்
பாடியவர்: சிக்கில் திரு. குருசரண், டி.எம்.எஸ்.
இப்பாடலை தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. கிருஷ்ணமூர்த்தி

அனைவருக்கும் நன்றி.

நடராஜர் படத்திற்கு நன்றி: குந்தவை (மோகன் தாஸ்)

Saturday, March 21, 2009

த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்

இந்தியத் திருநாட்டின் வட எல்லையில் இருந்து தென் எல்லை வரை பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பன்னிரண்டு திருத்தலங்களில் இருக்கும் இலிங்கத் திருமேனிகளை சோதிலிங்கங்களாக பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பன்னிரண்டு திருத்தலங்களையும் ஒரே பாடலில் நினைவு கொண்டு போற்றும் ஸ்தோத்திரம் இந்த த்வாதச ஜ்யோதிர் லிங்க ஸ்தோத்ரம்.

பன்னிரு சோதிலிங்கங்கள்:

1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச ச்ரிசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஷ்வரம்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

வாரணஸ்யாம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே

ஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய



ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச - சௌராஷ்ட்ர தேசத்தில் சோமநாதர்
ச்ரிசைலே மல்லிகார்ஜுனம் - ச்ரிசைலத்தில் மல்லிகார்ஜுனர்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் - உஜ்ஜயினியில் மஹாகாலர்
ஓம்காரம் அமலேஷ்வரம் - அமலேஷ்வரத்தில் ஓம்காரேஸ்வரர்
பரல்யாம் வைத்யநாதம் ச - பரலியில் வைத்யநாதர்
டாகின்யாம் பீமசங்கரம் - டாகினியில் பீமசங்கரர்
சேதுபந்தே து ராமேசம் - இராமேஸ்வரத்தில் இராமநாதர்
நாகேசம் தாருகாவனே - தாருகாவனத்தில் நாகேசர்
வாரணஸ்யாம் து விஸ்வேசம் - காசியில் விஸ்வேசர்
த்ரயம்பகம் கௌதமீ தடே - கௌதமி நதிக்கரையில் த்ரயம்பகேசர்
ஹிமாலயே து கேதாரம் - இமயமலையில் கேதாரேஸ்வரர்
குஸ்மேசம் ச சிவாலயே - சிவாலயத்தில் குஸ்மேசர்

ஏதானி ஜ்யோதிர் லிங்கானி - இவையே சோதி இலிங்கங்கள்
சாயம் ப்ராத: படேந் நர: - மாலையிலும் காலையிலும் படிக்கும் ஒருவரின்
சப்த ஜன்ம க்ருதம் பாபம் - ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள்
ஸ்மரனேன விநஷ்யதி - ஒரே நொடியில் அழிந்துவிடும்

Sunday, February 22, 2009

பெங்களூர் பெஹாக் ராகத்தில் ஒரு சிவராத்திரி!

தில்லை ஈசனைத் திருவரங்கம் பாடுமா? திருவரங்கப்ரியா பாடுறாங்க! ஷைலஜா அக்கா தானே எழுதிப் பாடும் சிவ-கவி இதோ, சிவராத்திரி நன்னாளில்! பெங்களூரின் பெஹாக் ராகத்தில் பாடலைக் கேட்டு ரசியுங்கள்!
Gabcast! MadhaviPanthal #61





எடுப்பு:
இமயம் செல்ல வேண்டும்-அதற்கு
சமயம் வந்திடுமா?


தொடுப்பு:
உமையவள் நாதனை உண்மைப் பரம் பொருளை
இமைப் பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே
(இமயம்)

முடிப்பு:
ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித் துடித்திடுமே - எனவே

(இமயம்)


ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே
- என்னும் போது, ஒன்றன் பின் ஒன்றாய், ஆசை வலை கட்டுவதைக் கண் முன்னே கொண்டு வராங்க இல்லையா?

ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே = இறைவன் நாமத்தை வெறுமனே சொல்லாது, "இசைந்து" சொல்லணும்! மனத்தால் "இசைந்து" சொல்லும் போது தான், இசையாகிறது அல்லவா? ஆடி ஆடி அகம் கரைந்து, "இசை" பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி என்பதே அந்த "இசைந்து"!

இன்று சிவராத்திரி நன்னாளில் "இசைந்து" சொல்லுவோமா? இதோ ஓதுவார் சொல்லித் தர கூடவே ஓதிக் கொண்டே படியுங்கள்!
Thevaram_Appar_Cho...

ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!

அப்பர் சுவாமிகளின் நமச்சிவாயத் திருப்பதிகம்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச் சிவாயவே.

வேத வாசகம் என்னும் சொல்லுக்குப் பொருளாக உள்ளவன்! சோதி வடிவானவன்!
அவன் பொன்னடிகளை, மனதால் பொருந்திக் கையால் தொழும் போது,
கல் தூணில் பூட்டி, என்னைக் கடலில் போட்டாலும்
நல்ல துணையாய் வருவது, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!


பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச் சிவாயவே


பூக்களுக்குச் சிறப்பு, பொங்கி விரியும் தாமரை!
பசுக்களுக்குச் சிறப்பு, சிவபூசைக்கு பஞ்ச கவ்வியம் தருதல்! (பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்ற சாணம்)
அரசனுக்குச் சிறப்பு, கோல் வளையாமல் ஆட்சி புரிதல்!
நாவுக்குச் சிறப்பு, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே!


வீட்டின் விளக்காய் புற இருளும் போக்கும்! அக இருளும் போக்கும்!
சொல்லின் விளக்காய், ஐந்தெழுத்தின் விளக்கமாய், ஆன்ம சோதியுள் திகழும்!
பல ஆன்மாக்களின் அக விளக்கு! அதைப் பலரும் அவரவர் அகத்தில் காண்பார்கள்!
அதுவே நல் விளக்கு! நமசிவாய விளக்கு! நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே!

இனிய சிவராத்திரி வாழ்த்துக்கள்!
இந்தச் சிவன் இரவில், ஈழச் சீவன் நிம்மதியை, உளமார வேண்டிடுவோம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!