Wednesday, June 24, 2009

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடைய கோனே

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ


பாடலை இங்கே கேட்கலாம்

திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: G V பிரகாஷ்
இயற்றியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்

No comments: