Sunday, August 17, 2008

மாணிக்கவாசகர் திருவாசகம்: நல்ல அர்ச்சனையைத் தமிழில் செய்ய முடியுமா?

இங்கே தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! எங்கள் வீட்டில் நாங்க"ளும்" குடியிருப்போம்! ஹா ஹா ஹா! உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல!
நம்ம வீட்டில் நண்பர்க"ளும்" குடியிருக்கலாம்-னு சொன்னா அது அன்பு! நாங்க"ளும்" குடியிருப்போம்-னா அது அசட்டுத்தனம்!

நல்ல வேளை, அது போன்ற அறிவிப்புப் பலகைகளைத் தமிழக அரசு, திருக்கோயில்களில் இருந்து எடுத்து விட்டது! சட்ட திட்டம் எல்லாம் போட்டு விட்டது!
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?
சரி, இவ்வளவு வீறாப்பு பேசறோமே! நாமே ஆலயத்துக்குச் செல்லும் போது, எத்தனை பேர், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்? கையைத் தூக்குங்க பார்ப்போம்!

பதிவில் எழுதி விளாசுகிறோமே! ஆனால் நேராப் போகும் போது, நமக்கு அப்படிப் பண்ணத் தோனுதா?
அர்ச்சகர்கள் மேல் மட்டும் விரலை நீட்டுகிறோம்! நம் மேலும் கொஞ்சம் நீட்டிக் கொள்ளலாம் அல்லவா?
ஹிஹி! தப்பில்லை! விரலை கொஞ்சம் நீட்டிக் கொள்ளுங்கள்! நானும் நீட்டிக் கொள்கிறேன்!

சென்ற முறை சென்னை சென்ற போது (Apr-2008), ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தான் இவ்வாறு செய்ய முடிந்தது! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்!
அதுவும் அங்கிருந்தவர் நண்பர்! அடியேன் கேட்டுக் கொண்டதால், சுருக்கமாக ஆண்டாள் போற்றியைச் சொல்லி அர்ச்சனை செய்து வைத்தார்! திருமயிலை கபாலீச்வரத்தில் இதே போல் முயன்றேன்! முடியவில்லை! எனக்கு அங்கு யாரையும் தெரியவும் இல்லை!

இத்தனைக்கும் வைணவ ஆலயங்களில், கருவறைக்குள்ளே தமிழைக் காலம் காலமாக ஓதுகிறார்கள்! ஆனால் அங்கு கூட, அர்ச்சனை மட்டும், தமிழில் காண்பது அரிது தான்!
இந்த உண்மையை அடியேன் வெட்கத்துடன் சொல்லியே ஆக வேண்டும்!
ஒரே ஆறுதல்: அர்ச்சனை முடிந்த பின் காட்டப்படும் கற்பூர ஆரத்தியில், தமிழ்ப் பாசுரம் சொல்லித் தீபம் காட்டுகிறார்கள்! மக்களுக்குப் புரிவது போல், பெருமாளின் வைபவத்தைத் தமிழில் சொல்கிறார்கள்!


ஆனால் மெளலி அண்ணாவுடன் கர்நாடக மாநிலம் - மேலக்கோட்டைக்குச் சென்றிருந்தேன்!
அங்கு கவர்ந்ததே பயிற்சிப் பள்ளி என்னும் குருகுலம் தான்!
கன்னடப் பாடல்கள், தமிழ்ப் பாசுரங்கள், வடமொழி சுலோகங்கள் பயிற்றுவிக்கப் படுவதாக அறிவிப்பிலும் கண்டேன்!
கன்னடக் கோயில் தான்! ஆனால் தமிழ்மொழிக் காழ்ப்பு இன்றி, அருளிச் செயல்கள் பயிற்சி!
(அதைப் பார்த்து விட்டு, மனம் மகிழ்ந்து, கோயில் உண்டியலில் தற்காலிகமாகக் காசு போடாதீங்க-ன்னு சொன்ன நானே, காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன்! அதுக்கு மெளலி அண்ணா என்னை ஓட்டித் தள்ளுனது தனிக்கதை :)

இத்தனைக்கும் அப்போது காவிரி உண்ணாவிரதப் போராட்டம்!
மேலக்கோட்டை இராமானுசர் சன்னிதியில், "பூ மன்னு மாது பொருந்திய மார்பன்" என்று என்னால் தமிழில் உரக்க ஓதிப் பாட முடிந்தது!
எந்தக் கன்னடத்தாரும் வந்து தடுக்கவில்லை! இந்த நிலை தமிழகத்திலும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம்மூருல தில்லையில் தமிழ்ப் பாட்டு பாடவே இல்ல தடுமாற வேண்டி இருக்கு?

அர்ச்சனை என்பது மக்களுக்காகச் செய்வது!
இறைவனைப் போற்றினாலும், சங்கல்பம் என்னும் உறுதிப்பாட்டில் மக்கள் பெயரை அல்லவா கேட்டு வாங்குகிறார்கள்?
மக்களுக்குச் செய்வது, மக்கள் உணர்வது போல் செய்தால் தான் இன்னும் நலம்!

வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மறுமலர்ச்சிகள், மனமலர்ச்சிகள் உருவாவதில்லை! இதற்கு மக்களை உணர வைக்கணும்! அதை அரசு செய்யுமோ?
கொள்கை அறிவிப்போடு எல்லாம் முடிந்து விடும்! கூடவே சில பயிற்சி நிலையங்கள்! அவ்வளவு தான்! உண்டியல் எண்ணவே நேரம் சரியாக இருக்கே! :)

அரசின் சாதனைகளைப் பெரிய பெரிய புகைப்படம் போட்டு, பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆளுயர கட்-அவுட்டுகள், நியான் போர்டுகள் எல்லாம் செய்யும் அரசு!
ஆனால் அதே உண்டியல் பணத்தில் கொஞ்சம் எடுத்து, மக்களைத் தமிழ் அர்ச்சனை செய்யுமாறு சொல்லும் விளம்பரங்கள், விழிப்புணர்வுகள் - இதெல்லாம் செய்யுமா? ஓ...ஓட்டுகள் பெற்றுத் தராத எதுவும் வீண் செலவு அல்லவா? :)

ஹிஹி! சரி சரி விடுங்க! ஆன்மீக இயக்கங்கள் தான், தம் தொண்டால் இதைச் செய்யணும்! வெறுமனே அம்பலம் ஏறி, நாலு பதிகம் பாடுவதோடு கடமை முடிந்தது என்று போய் விடக் கூடாது! இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், காலமெல்லாம் நிலைக்கும்! முயற்சி திருவினை ஆக்கும்!


கொஞ்ச நாளைக்கு முன்னால் ஜீனியர் விகடன் இதழ் சார்பாக, நெல்லையில் தமிழ் அர்ச்சனை செய்ய முனைந்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின!
சில அர்ச்சகர்களுக்குத் தமிழில் அர்ச்சனை செய்யவே தெரியவில்லை!
ஒரு வேளை வேண்டுமென்றே இப்படி முரண்டு பண்ணுகிறார்களோ என்று சந்தேகம் வந்தது! புத்தகத்தைப் பார்த்துச் செய்யுங்கள் என்று சொன்னார்களாம்!

அரசு வெளீயீடு புத்தகத்தைத் தேடு, தேடு-ன்னு தேடினது தான் மிச்சம்!
அர்ச்சகர்களிடமும் இல்லை! கோயில் அலுவலகத்திலும் இல்லை! அறநிலையத் துறை அலுவலரிடமும் இல்லை! அப்புறம் வந்ததான்னும் தெரியலை! :(
சரி, நாமும் தேடுவோமே-ன்னு அறநிலையத் துறை வலைத் தளத்தில் தேடினேன்! சுத்தம்! ஒன்னுமே இல்லை! வழக்கமான தமிழ் அர்ச்சனை எங்கள் மூச்சு என்ற வாய்-அர்ச்சனை மட்டும் தான் இருக்கு! :)

பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒருவரின் தந்தை எனக்கு உதவினார்;
எப்படியோ தேடிப் பிடித்து ஒரு புத்தகம் கைக்கு கிடைத்தது! பார்த்ததும் நானே அதிர்ந்து போய் விட்டேன்!
- மந்திரங்களுக்கான தமிழ்ப் பொருளே அதில் இல்லை!
புலவர்களை வைத்து எழுதச் சொல்லி இருக்கிறார்கள் போல! அவர்களும் அவர்கள் புலமையை நல்லாக் காட்டியிருக்கிறார்கள்! அம்புட்டு தான்! மந்திரப் பொருள் ஒன்றுமே இல்லை!


ஓம் மயூர வாகனாய நமஹ = இதுக்கு இணையான தமிழ் மந்திரமே காணோம்! மயில் வாகனம் இல்லாமல் முருகப் பெருமானுக்கு ஒரு அர்ச்சனையா?

ஓம் அக்ஷய பலப் ப்ரதாய நமஹ = வரம் தரும் கரமே போற்றி! வரம்-தரும்-கரம்-ன்னு ரைமிங்கா, எகனை மொகனையா தமிழ்ப் புலவர் எழுதிட்டாரு! பாவம், அவரைக் குறை சொல்ல முடியாது!
என்றும் நீங்காத நல் நிறைவை அருள வேணுமே போற்றி!
ஒரு குடும்பஸ்தர் நிம்மதி தேடித் தானே கோயிலுக்கு வருகிறார்? அவருக்கு நிறைவைச் சொல்லும் மந்திரம் இல்லையா? அடப் பாவமே!

நூலைத் தமிழாக்கிய பின் குன்றக்குடி அடிகளாரிடமோ, இல்லை ஜீயர்கள், துறைவர்கள், ஆதீன கர்த்தர்கள், அருளாளர்களிடமோ காட்டுவது இல்லையா? இது என்ன மொழிப் போட்டிக்கும் வீம்புக்கும் செய்வதா?
ஆண்டாளைக் கேட்டிருந்தா, அக்ஷய பலப் ப்ரதாய நமஹ = "நீங்காத செல்வம் நிறைந்தேலோ போற்றி"-ன்னு கொடுத்திருப்பாளே!

புதுசாக் கூட எதுவும் எழுத வேணாமே! மாணிக்கவாசகரும், அருணகிரியும் செய்து விட்டுப் போயிருக்கிறார்களே! அதை அப்படியே காப்பி & பேஸ்ட் பண்ணாக் கூடப் போதுமே! நிறைவான பொருள் வந்து விடுமே!
மறை ஒலிகளுக்கா தமிழில் பஞ்சம்? மந்திரமாவது நீறு! தந்திரமாவது நீறு-ன்னு இருக்கே!
திவ்ய சரணார விந்தயோஹோ = அளந்தாய் அடி போற்றி என்று திருவடி அர்ச்சனையைத் துவக்குகிறாளே கோதை! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க-ன்னு அர்ச்சிக்கிறாரே மணிவாசகர்!

** இது குறித்து அறநிலையத் துறை ஆணையருக்கும், முதல்வர் கலைஞருக்கும் தனி மடல் ஒன்று அனுப்பலாம்-னு நினைச்சேன்! - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொல்லுங்கள்! ***
சரி, இன்னிக்கி மாணிக்கவாசகர் செய்யும் தமிழ் அர்ச்சனையைப் பாருங்கள்! அப்பறம் நீங்களே தமிழ் அர்ச்சனை தான் வேணும்-னு கேட்டு வாங்கிச் செய்வீங்க!


சென்ற மூன்று பதிவுகளில் மூவர் தேவாரங்களைப் பார்த்தோம்! இன்னிக்கு திருவாசகம்! திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்! அப்படி ஒரு வாசகம்! இதோ, இளையராஜா பாடுவதைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்! (raaga.com! விளம்பரத்தைத் தள்ளி விட்டு, Track Position=06:00 to 07:30, வரை இந்தப் போற்றி உள்ளது)
இல்லையேல், இதோ, ஓதுவார் பாடுவது!
nama_sivaya_vazhga...

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!


துவங்குவதே திருவைந்தெழுத்தில் தான்! பஞ்சாட்சரம்! = நமசிவாய!
திருவாசகமே ஐந்தெழுத்தில் தான் துவங்குகிறது! வேறெந்த திருமுறைக்கும் இப்படி அமையவில்லை! இது தான் திருவாசகத்தின் சிறப்பு!

அதனால் தான் வாதவூரன் சொல்ல, நாம் எழுதியது என்று ஈசனே தன் கைப்படத் திருக்கடைக்காப்பிட்டு அருளினான்! அவனுக்கே தெரியும் தன்னை விடத் தன் நமசிவாய நாமம் தான் உயர்ந்தது என்று!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்! என்பார் அப்பர் சுவாமிகள்!
முதலில் நாமம், அப்புறம் தான் மூர்த்தி! அன்று நடுச்சபையிலே பெண்ணுக்குக் கை கொடுத்தது திருநாமம்! வராத இறைவனையும், வர வைத்தது திருநாமம்!

அடுத்து நாதன் தாள் வாழ்க = இறைவனின் திருவடிகள்! அதற்குத் தான் வாழ்த்து!
இன்னும் இறைவனை இவர் வாழ்த்தவே இல்லை பாருங்க! திருநாமமும், திருவடியும் தான் பாடிக்கிட்டு இருக்காரு!
திருப்பல்லாண்டில் பெரியாழ்வாரும் இப்படியே அருளிச் செய்துள்ளார்! பல்லாண்டு, பல்லாண்டு,...உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு! - உனக்குக் காப்பு இல்லை! உனது திருவடிகளுக்குத் திருக்காப்பு!

பெரியாழ்வாரும் மாணிக்கவாசகரும் வெவ்வேறு கால கட்டங்கள்! இருந்தும் ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதிரி சிந்திக்க முடிந்தது?


கோகழி=திருப்பெருந்துறை என்னும் ஊர்! அங்கு தான் இறைவன் மெளன குருவாய் மாணிக்கவாசகருக்கு உபதேசம் காட்டி அருளினார்! நன்றி மறவாமல் ஊரைப் பாடுகிறார்! இநத ஊரு எங்கே இருக்கு, இக்காலப் பேரு என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! இந்த ஊரில் லிங்கம் கிடையாது, அம்பாள் கூட சிலை இல்லை! பாதங்கள் மட்டுமே! எல்லாப் பூசையும் மாணிக்கவாசகருக்குத் தான்!

ஆகமம் ஆகிநின்று = ஆகமம் என்பதெல்லாம் தேவையா? என்று இன்னிக்கி மெத்தப் படித்தவர்கள், படிக்காமலேயே கேள்வி எழுப்புவார்கள்! :)
ஆனால் மணிவாசகர் அப்படியில்லை! இறைவன் எங்கும் இருக்கிறான் தான்! ஆனால் விளிம்பு நிலை மாந்தர்களான நாம் அவனை எப்படித் தரவிறக்கம் செய்து கொள்வது?

* அணுக்கள் எங்கும் இருக்குது தான்! ஆனா அணு உலையில் தானே மின்சாரம் வரும்?
** பசுவின் உடலில் பால் எங்கும் இருக்கு தான்! ஆனால் காம்பில் மட்டும் தானே பால் வரும்?

வீட்டில் இருக்கும் தெய்வமும், கருவறைத் தெய்வமும் ஒன்னு தான்! ஆனால் கருவறைத் தெய்வம், நாம் மட்டும் அல்லாது, பல அடியார்கள் சேவித்து உருகிய சான்னித்யம்! அதனால் தனிநலத் தெய்வ உருவத்தை விட, பொதுநல தெய்வ உருவத்துக்குச் சாந்நித்யம் அதிகம்!
அடுத்த முறை ஆகமங்களைக் கேலி செய்யாதீர்கள்! கருவறையில் ஃபோட்டா புடிக்க விடாத ஆகமம் எங்களுக்கு வேணாம்-னு எல்லாம் பேசாதீங்க! ஆகமத்தைப் புரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்!

அண்ணிப்பான் = இனிப்பான்! அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவினுக்கே என்பார் மதுரகவியாழ்வார்! அப்படி ஆகமம் ஆகி நின்று இனிப்பவன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் = ஒன்றாய், பலவாய் இருப்பவன் ஈசன்! அந்த இறைவன் அடி வாழ்க!



வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


வேகமாய் அலைபாயும் மனத்தை அடக்கி ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிஞ்ஞகன் = பீலி அணிந்தவன்! பினாகம் என்னும் வில், பிஞ்ஞகமானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! பினாகம் வில்லை உடையவன் ஈசன்! அருள் பெய்யும் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் = அண்மை x சேய்மை = அருகில் x தொலைவில்!
புறத்தார்க்குத் தொலைவில் தான் நிற்பானாம்! இது மணிவாசகர் கருத்து!
கை குவித்து வணங்குபவர்! கைகளைத் தலை மேல் குவித்து வணங்குபவர்! இவர்கட்கு மகிழ்வும், ஓங்கு பெருமையும் தரும் திருவடிகள் போற்றி!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

தேசன்=தேசு/ஒளி பொருந்தியவன்! நிமலன்=குற்றமில்லாதான்!
ஆராத இன்பம்=பசி ஆறிடும்! செல்வமும் ஒரு நாள் ஆறிப் போகும்! எது ஆறாது? சிவ மங்கள இன்பம் ஆறாது! ஏன்? அது ஆராத ஒன்று! அதாச்சும் தெவிட்டாத ஒன்று! அது நித்ய விபூதி!

மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே இப்படி!
இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! பேசாம இதையே அரசு எடுத்து வெளியிட்டு இருக்கலாம்!

எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! வாழ்க!!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! போற்றி!


சீரார் பெருந்துறை சிவபெருமான் திருவடிகளே சரணம்! - திருச்சிற்றம்பலம்!

68 comments:

கலியுக சித்தன் said...

Muslims says god knows arabic - he spoke to GURU MOHAMMED IN ARABIC.

Christians says only jesus knows the language to communicate with god..some of the christians in their church...pentecost...they speak to god in the middle of their prayer in a language....they make ....ooolallhalll..abddcabada..like sound...at the end priest says, we all talk to the god..how happy are we....

Hindu's are saying "sanskrit is god's language...so we praise the lord ...especially in front of idols...they speak/say/something in sanskrit..i hope they are praising the lord in sanskrit...some brahmins shouting in sanskrit in front of idols without knowing the meaning of it.. and they also they make lot of mistake in their pronunciation..MY GOD FORGIVE THEM

i really don't know...which language god knows...ARABIC...SANSKRIT..or christians ooolalalha...abdacabda...

"BLOG SATGURUS LIKE YOU SHOULD CLEAR MY CONFUSION".....

Kavinaya said...

அருமையான பதிவு கண்ணா. கருவறைத் தெய்வம் பற்றிய உண்மையை நன்கு விளக்கினீர்கள். சம்ஸ்கிருதத்தை சரியாக உச்சரிக்கையில் அந்த மொழிக்கென்று certain good vibrations இருப்பதாக ஒரு புரிதல் உண்டு எனக்கு. அது சரிதானா? வீட்டில் மட்டும் இன்றி கோவிலுக்கு சென்று இறையை வணங்குவதும் அதே போன்ற காரணத்தால்தான். இறைசக்தி ஓரிடத்தில் குவிந்திருத்தல். ஸ்ரீராமகிருஷ்ணர் மின்சாரத்தை வைத்து இந்த கருத்தை அழகாக விளக்கியிருப்பார்.

எனக்குப் பிடித்த சிவபுராணமும் தந்திருக்கிறீர்கள். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்ற வரிதான் சிவபுராணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. esnips audio கேட்க முடியவில்லை.

கோவி.கண்ணன் said...

தமிழில் பாடினால் என்ன ? சமஸ்கிரதத்தில் பாடினால் என்ன ? மொழிகளுக்கு அப்பாற்பட்டவன் அன்றோ இறைவன்.
:)

இந்தியாவின் பொதுமொழியான சமஸ்கிரதத்தில் ஸ்லோகம் சொல்வதால் லோக ஷேமம் தானே ? அதிலென்ன என்ன பாதகம் ? ஆண்டவன் மொழியான சமஸ்கிரதத்தில் இருக்கும் அதிர்வு (எவன்யா கிளப்பிவிட்டான் இதையெல்லாம்) தமிழில் இல்லையே ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
தமிழில் பாடினால் என்ன ? சமஸ்கிரதத்தில் பாடினால் என்ன ? மொழிகளுக்கு அப்பாற்பட்டவன் அன்றோ இறைவன்.
:)//

அது சரி!
சைவம் படைத்தால் என்ன? அசைவம் படைத்தால் என்ன?
படையலுக்கு அப்பாற்பட்டவன் அன்றோ இறைவன் :))

//ஆண்டவன் மொழியான சமஸ்கிரதத்தில் இருக்கும் அதிர்வு (எவன்யா கிளப்பிவிட்டான் இதையெல்லாம்) தமிழில் இல்லையே ?//

நீங்க என்ன சொல்ல வரீங்க கோவி அண்ணா?
பதிவைப் படிக்க மாட்டீங்களா?
பின்னூட்டத்துக்கு மட்டும் தான் பதில் சொல்வீங்க போல!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
அருமையான பதிவு கண்ணா. கருவறைத் தெய்வம் பற்றிய உண்மையை நன்கு விளக்கினீர்கள்//

நன்றி-க்கா!

//சம்ஸ்கிருதத்தை சரியாக உச்சரிக்கையில் அந்த மொழிக்கென்று certain good vibrations இருப்பதாக ஒரு புரிதல் உண்டு எனக்கு. அது சரிதானா?//

சரியில்லை! :)
அதிர்வுகள் ஓலிக்குத் தான்! மொழிக்கு அல்ல!

எந்த மொழியிலும் அதிர ஒலிக்க முடியும்! மொழியே இல்லாமல், மெட்டில் கூட ஒலிக்கலாம்!

எடுத்துக்காட்டாக இந்தப் பதிவில் ஆண்டாளிடம் இருந்தும் மாணிக்கவாசகர் கிட்ட இருந்தும் சொல்லி இருக்கேனே!

* பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
* லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
* சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
* கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

ஆண்டாள் செய்யும் இந்தப் போற்றியில் அதிர்வுகள் மூலத்தை விட அதிகமாக வருகிறதே!

மனம் குவிந்தால், அதிர்வுகள் தானே ஏற்படும்! அப்படி மனம் குவிய, அர்ச்சனை போன்ற எளிய பூசனைகள் பல மொழிகளில் இருப்பது தான் மக்களுக்கு நல்லது!

//எனக்குப் பிடித்த சிவபுராணமும் தந்திருக்கிறீர்கள். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்ற வரிதான் சிவபுராணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது//

இந்த அர்ச்சனைக்கு அடுத்து அந்த வரி தான்! :)

//esnips audio கேட்க முடியவில்லை//

இதோ சரி பார்க்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கலியுக சித்தன்
மொழி குறித்த உங்கள் கேள்விக்கு, கவிநயா அக்காவுக்குத் தந்த பதிலைப் பாருங்க! உங்கள் கேள்விக்குச் சற்று நேரம் கழிச்சி வாரேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@kavi akka

esnips audio is now working!!!

Kavinaya said...

//மனம் குவிந்தால், அதிர்வுகள் தானே ஏற்படும்! அப்படி மனம் குவிய, அர்ச்சனை போன்ற எளிய பூசனைகள் பல மொழிகளில் இருப்பது தான் மக்களுக்கு நல்லது!//

நன்று சொன்னீர்கள். இறைவனை வணங்க அன்பும் பக்தியும்தானே அவசியமான தகுதிகள். நன்றி கண்ணா.

esnips-ம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அருமை. நன்றி.

குமரன் (Kumaran) said...

//அர்ச்சனை முடிந்த பின் காட்டப்படும் கற்பூர ஆரத்தியில், தமிழ்ப் பாசுரம் சொல்லித் தீபம் காட்டுகிறார்கள்! மக்களுக்குப் புரிவது போல், பெருமாளின் வைபவத்தைத் தமிழில் சொல்கிறார்கள்!//

இந்த வழக்கத்தைப் பற்றி நான் வியப்பது உண்டு இரவிசங்கர். எந்தக் காலத்தில் இந்த வழக்கம் தோன்றியதோ? மிக நல்ல வழக்கம். பாசுரம் சொல்லி தீபாராதனை காட்டிவிட்டு அப்போதே திருமுக, திருமுடி, திவ்யாயுத, திருக்கர, திருவுதர, திருவடிச் சேவைகளைச் செய்து வைத்து, அதே நேரத்தில் பெருமாள் தாயார் இவர்களின் திருநாமங்களைச் சொல்லி சுருக்கமாக திருத்தல புராணத்தைச் சொல்லி என்று மிக நன்றாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

நன்றாகத் தனி மடல் அனுப்பலாம். வேண்டுமானால் என் கையொப்பத்தையும் இடுகிறேன்.

பாதி இடுகை படித்து முடித்துவிட்டேன். மீதி இடுகை மீண்டும் வந்து படிக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//பாதி இடுகை படித்து முடித்துவிட்டேன். மீதி இடுகை மீண்டும் வந்து படிக்கிறேன்.//

ஹா ஹா ஹா
ரெண்டு பதிவாப் போடலாம்-னு தான் பார்த்தேன்! ஆனா மணிவாசகர் அர்ச்சனை தடைபடும்! அதான் ஒரே மூச்சா...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//இந்த வழக்கத்தைப் பற்றி நான் வியப்பது உண்டு இரவிசங்கர். எந்தக் காலத்தில் இந்த வழக்கம் தோன்றியதோ?//

சன்னிதியில் பேசும் வழக்கம் கொண்ட ஒரு ஆழ்வார் காலத்தில் இருந்து தான் குமரன்! :)

இந்த ஆழ்வார் சும்மா போனோமா, கண்ணை மூடிக்கிட்டு சாமி கும்பிட்டோமா-ன்னு வர மாட்டாரு! அர்ச்சகர் கிட்ட பேச்சு கொடுக்கறது, அது என்ன, இது என்னன்னு கேக்குறது, நேரா பெருமாள் கிட்டயே, எனக்கு அது பண்ணி வைங்க, இது பண்ணி வைங்க-ன்னு கேக்குறது...

இதெல்லாம் கண்ட அர்ச்சகர்கள், ஆழ்வார் கேள்வி கேட்டு மடக்குறத்துக்கு முன்னாடியே, தாங்களாகவே சொல்ல ஆரம்பிச்சது தான்! இன்னிக்கி வரை தொடருது! :)

போதாக்குறைக்கு நம்மாழ்வாருக்கு அரங்கம் வரச் சொல்லி ஓலை அனுப்புறது, அது இது-ன்னு இவர் பண்ண லூட்டி கொஞ்ச நஞ்சமில்லை! :)))

கோவி.கண்ணன் said...

//நீங்க என்ன சொல்ல வரீங்க கோவி அண்ணா?
பதிவைப் படிக்க மாட்டீங்களா?
பின்னூட்டத்துக்கு மட்டும் தான் பதில் சொல்வீங்க போல!//

பின்னூட்டம் போட்டுவிட்டுதானே மேலே உள்ள பின்னூட்டத்தைப் பார்த்தேன். என்ன ஒரு கோ(வி) இன்சிடெண்ட் !

//அது சரி!
சைவம் படைத்தால் என்ன? அசைவம் படைத்தால் என்ன?
படையலுக்கு அப்பாற்பட்டவன் அன்றோ இறைவன் :))//

அசைவம் சைவமோ எதையும் சாமி படைக்கச் சொல்லி கேட்கல !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கலியுகச் சித்தன்
//"BLOG SATGURUS LIKE YOU SHOULD CLEAR MY CONFUSION".....//

ஹா ஹா ஹா
இந்த மாதிரி நுணுக்கமா கேள்வி கேக்கறவங்க தான் BLOG SATGURUS!
அடியேன் இல்லை!

//i really don't know...which language god knows...ARABIC...SANSKRIT..or christians ooolalalha...abdacabda...//

தெரிஞ்சிக்கிட்டே தான் இந்த கேள்வி கேட்டீங்களா தெரியலை! :)

ஒரு எடுத்துக்காட்டுக்கு வச்சிக்குங்க!
உலகம்=இறைவன்; பல மொழிகள்=நீங்க சொன்ன ...
ARABIC...SANSKRIT..or christians ooolalalha...abdacabda

இப்படி பல மொழிகள் பேசிக்கறவங்க, பொதுவான ஒரு உலகத்தோடும், அதன் வளர்ச்சியோடும் எப்படி தொடர்பு கொள்றாங்க?

எல்லா மொழியும் படிச்சா தான், மொத்த உலகத்தோடும் தொடர்பு கொள்ள முடியுமா என்ன?

உலகத்தின் பயன்கள், அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, எப்படியோ ஒரு விகிதத்தில் எல்லாரையும் சென்றடைஞ்சிக்கிட்டு தானே இருக்கு? எப்படி?

கடவுளுக்கு எந்த மொழி புரியும்-னு கேட்கறீங்க!

சரி, கங்கை, காவிரி, நைல், அமேசான்!
இதுல இருக்குற தண்ணி எல்லாம் ஆவி ஆவுதுல்ல?
மேலே சென்ற பின்னால, எந்த எந்த ஆத்திலிருந்து எந்த எந்த நீராவி-ன்னு வானமோ, மேகமோ குழம்புமா?

அது போல இறைவனுக்கு ARABIC...SANSKRIT..or christians ooolalalha...abdacabda என்ற குழப்பம் வருமா என்ன?

எல்லாவற்றையும் கடந்த கடவுள், மனத்தையும் கடந்து உள்ளான்!
ஆனால் "மனமுள்ள" நம்முடன் பழக வேண்டி இருக்கு? எப்படிப் பழகறது?

நமக்குப் பழக வேண்டி இருப்பதால், நம் மொழி, நம் கலாச்சாரம், நம் உணர்வு என்று அவன் மேல் ஏற்றுகிறோம்! நம் புரிதல் மேம்பட!

நீராவித் தண்ணி ஒரு இடத்துல பொழிஞ்சா அமேசான்-ன்னு நினைச்சிக்கிடுவாங்க!! இன்னொரு இடத்துல பொழிஞ்சா கங்கை-ன்னு நினைச்சிக்கிடுவாங்க!

கீழே இருக்கும் போது அது அமேசான் தண்ணி தான்! அதைக் கங்கை தண்ணி-ன்னு சொல்லவே முடியாது தான்! ஆனால் மேலே இருக்கும் போது? - குழப்பமே இல்லை!

அவரவர் தமதம அறிவறி வகைவகை என்பார் ஆழ்வார்!
எந்த மொழியும் தனியா தேவபாஷை-ன்னு கிடையாது! அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்! அவரவர் விதிவழி அடையநின் றனரே!!

ஆயில்யன் said...

//புதுசாக் கூட எதுவும் எழுத வேணாமே! மாணிக்கவாசகரும், அருணகிரியும் செய்து விட்டுப் போயிருக்கிறார்களே! அதை அப்படியே காப்பி & பேஸ்ட் பண்ணாக் கூடப் போதுமே! ///

அதானே!

கொட்டிகிடக்குது கடவுளை போற்றி துதித்த பாடல்கள் அதிலிருந்தே நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியுமே!

ஆயில்யன் said...

//கவிநயா said... எனக்குப் பிடித்த சிவபுராணமும் தந்திருக்கிறீர்கள். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்ற வரிதான் சிவபுராணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது.//


எனக்கும் கூட ! :))

முழுப்பாடலையும் மீண்டும் ஒரு முறை பாடிக்கொண்டேன் :))

ஆயில்யன் said...

10 வருடங்களுக்கு முன்பு வரை மார்கழி மாதங்களில் எங்கள் ஊர் அருகாமை தருமபுரத்தில் அதிகாலை வேளைகளில் நடைப்பெற்றுவந்த தேவரா வகுப்புக்களின் பாதிப்பில் நானும் அடிமையானவன்! அது போன்ற வகுப்புகள் இப்பொழுது கிடையாது!

பொக்கிஷங்கள் சீண்டப்படாமலே இருப்பது ஆச்சர்யம்தான்! :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
அதானே!
கொட்டிகிடக்குது கடவுளை போற்றி துதித்த பாடல்கள் அதிலிருந்தே நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியுமே!//

முத்ல்வருக்கு லெட்டர் போடும் போது சொல்லுறேன்; கையெழுத்து போட்டுக் குடுங்க அட்லாஸ் சிங்கமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நன்றாகத் தனி மடல் அனுப்பலாம். வேண்டுமானால் என் கையொப்பத்தையும் இடுகிறேன்//

இன்னும் சில விவரணங்கள் திரட்டிய பின்னர், நம் பதிவுலக மக்களைத் திரட்டி, பொதுவில் ஒரு விண்ணப்பம் வைக்கலாம் குமரன்! உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை! நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
அசைவம் சைவமோ எதையும் சாமி படைக்கச் சொல்லி கேட்கல !//

அது எப்படி நீங்க கண்டுபுடிச்சீங்க? படையல் வேணாம்; பைசா போதும் கோவி-ன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சிச்சா சாமி? :))

வடமொழி மந்திர அதிர்வு-ன்னு ஒருத்தர் பின்னூட்டத்துல சொன்னதுனால, உங்களுக்கு ஏன் அதிர்வு உண்டாகுது? :)

பதிவுல சொல்லப்பட்ட தமிழ் அர்ச்சனை-ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு எப்படிச் செயல் வடிவம் குடுக்கலாம்-னு ஐடியா குடுக்கறது விட்டுட்டு, மல்லு கட்டிக்கிட்டே இருந்தா எப்படி? ஒரு பயனும் இல்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
10 வருடங்களுக்கு முன்பு வரை மார்கழி மாதங்களில் எங்கள் ஊர் அருகாமை தருமபுரத்தில் அதிகாலை வேளைகளில் நடைப்பெற்றுவந்த தேவரா வகுப்புக்களின் பாதிப்பில் நானும் அடிமையானவன்!//

சூப்பரு ஆயில்ஸ் அண்ணாச்சி!
பாடுவீங்களா? லைட்டா ஹம் பண்ணாக் கூடப் போதும்! அடுத்த தேவாரப் பதிவுகளுக்கு கொஞ்சம் வேலை இருக்கு! சொல்லுங்க!

//அது போன்ற வகுப்புகள் இப்பொழுது கிடையாது!//

தருமபுர ஆதினம் வேற சில இடங்கள்-ல நடத்திக்கிட்டு தான் வராங்க! பழனியில் கூட உண்டு! ஆனால் அதைப் பரவலாக்கவோ, சரியான இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவோ தான் யாரும் முயற்சி எடுக்குறதில்லை! இதே போதும்-னு உட்கார்ந்த்கு கொள்கிறார்கள்!

//பொக்கிஷங்கள் சீண்டப்படாமலே இருப்பது ஆச்சர்யம்தான்! :(//

தோண்டினாத் தான் புதையல் அண்ணாச்சி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
10 வருடங்களுக்கு முன்பு வரை மார்கழி மாதங்களில் எங்கள் ஊர் அருகாமை தருமபுரத்தில் அதிகாலை வேளைகளில் நடைப்பெற்றுவந்த தேவரா வகுப்புக்களின் பாதிப்பில் நானும் அடிமையானவன்!//

சூப்பரு ஆயில்ஸ் அண்ணாச்சி!
பாடுவீங்களா? லைட்டா ஹம் பண்ணாக் கூடப் போதும்! அடுத்த தேவாரப் பதிவுகளுக்கு கொஞ்சம் வேலை இருக்கு! சொல்லுங்க!

//அது போன்ற வகுப்புகள் இப்பொழுது கிடையாது!//

தருமபுர ஆதினம் வேற சில இடங்கள்-ல நடத்திக்கிட்டு தான் வராங்க! பழனியில் கூட உண்டு! ஆனால் அதைப் பரவலாக்கவோ, சரியான இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவோ தான் யாரும் முயற்சி எடுக்குறதில்லை! இதே போதும்-னு உட்கார்ந்த்கு கொள்கிறார்கள்!

//பொக்கிஷங்கள் சீண்டப்படாமலே இருப்பது ஆச்சர்யம்தான்! :(//

தோண்டினாத் தான் புதையல் அண்ணாச்சி! :)

Anonymous said...

//பதிவுல சொல்லப்பட்ட தமிழ் அர்ச்சனை-ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு எப்படிச் செயல் வடிவம் குடுக்கலாம்-னு ஐடியா குடுக்கறது விட்டுட்டு, மல்லு கட்டிக்கிட்டே இருந்தா எப்படி? ஒரு பயனும் இல்லை!//

நாயன்மார்களும், சமயப் பெரியார்களு இப்படிதான் புலம்பிக்கிட்டு தமிழ், பக்தியெல்லாம் வளத்தாங்களா?.


இந்த பாஷைகளும் சமயமும் நமக்கு எப்படி அறிவையும் வளர்ச்சியயு கொடுத்தோ அதேபோல அடுத்த தலமுறைக்கு கொடுக்குன்னு நம்புங்க.

நீங்க அதமாத்றே இதமாத்றேன்னு உள்ளதெல்லாத்தையும் அழிச்சிடனு நினைக்காதேங்க.

சுக்லாம் ப்ரதரம் ஸ்லோகத்தையும்

ஆனைமுகன் ஆறுமுகன் தேவாரத்தையும் சொல்லி

அதிர்வ ஒருவாட்டி அளந்து பாருங்க .

அப்புறம் பாஷைகளோட சக்தியப் பத்தி சொல்லுங்க.

அருண் நிஷோர் பாஸ்கரன் said...
This comment has been removed by the author.
அருண் நிஷோர் பாஸ்கரன் said...

கண்ணன் உங்களிடம் ஒரு சந்தேகம்....அமெரிக்கா வில் உள்ள ஒரு கோவிலில் நமது ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்ச்சனை செய்தால் ஒத்து கொள்விர்களா? நீங்களே சொன்னது போல கர்நாடக மாநிலத்தில் திருப்பாவையை தமிழில் தானே ஓதுகிறார்கள் கண்டத்தில் மொழி பெயர்த்து இல்லையே...அதே போல் சமஸ்கிருத ஸ்லோகங்களை அந்த மொழில் சொன்னால் தானே அழகு. அதை மொழி வடிவமாக பார்க்காமல் ஒலி வடிவமாக பாருங்களேன்.
நான் தமிழ் மொழி க்கு எதிரானவன் அல்ல - ஆனால் தமிழ் தெரியாத ஒரு கன்னடகாரர் எப்படி நமது ஆண்டாள் எழுதிய திருப்பாவையை மொழி புரியாவிட்டாலும், அந்த தெய்வ புலவர் எழுதிய பாடலை பாடினாலே நமக்கு இறைவன் அருள் கிடைக்கும் என பாடுகிறாரோ, அதே போல் நானும் பல தெய்வ புலவர்கள் எழுதிய சமஸ்கிருத ஸ்லோகங்களால் அர்ச்சனை செய்தால் என்ன தவறு?
மேலும் நமது ஆலயங்கள் ஒன்றும் மற்றவர்கள் கூறுவது போல் தமிழை ஒதுக்கவில்லையே? எங்கள் பெருமாள் கோவிலில் அர்ச்சனையை தவிர மற்ற அனைத்தும் (தீபம் காட்டும் போதும், பெருமாள், தாயார், ஆண்டாள் மற்றும் ஆழ்வார் வீதி உலா போதும்) தமிழ் பாசுரங்களை தான் பாடுகின்றனர். இதே நடைமுறை தான் நான் பார்த்த சைவ திரு தளங்களிலும்.

Anonymous said...

//அருண் நிஷோர் பாஸ்கரன் said...

கண்ணன் உங்களிடம் ஒரு சந்தேகம்....அமெரிக்கா வில் உள்ள ஒரு கோவிலில் நமது ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்ச்சனை செய்தால் ஒத்து கொள்விர்களா?//

இந்துகடவுளை வழிபட அமெரிக்கர்கள் ஆங்கிலம் தான் வசதியென்றெண்ணினால் செய்துகொள்ளட்டுமே. உமக்கென்ன பிரச்சனை?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
நாயன்மார்களும், சமயப் பெரியார்களு இப்படிதான் புலம்பிக்கிட்டு தமிழ், பக்தியெல்லாம் வளத்தாங்களா?//

நம்மாழ்வார் வேதத்தை அதன் அமைப்பு மாறாமால் தமிழ் ஆக்கிக் காட்டினார்! வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன் என்பதே அவருக்குத் திருப்பெயர்!

ஏட்டிக்கு போட்டியாக அல்ல! தெளியாத மறை நிலங்களை அனைவரும் தெளியும் பொருட்டு!

//இந்த பாஷைகளும் சமயமும் நமக்கு எப்படி அறிவையும் வளர்ச்சியயு கொடுத்தோ அதேபோல அடுத்த தலமுறைக்கு கொடுக்குன்னு நம்புங்க//

அதை நீங்களும் கொஞ்சம் நம்பணும் அனானி ஐயா! சமயத்தை நன்கு புரியுமாறு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கணம்னு நீங்களும் நம்புங்க!

//நீங்க அதமாத்றே இதமாத்றேன்னு உள்ளதெல்லாத்தையும் அழிச்சிடனு நினைக்காதேங்க//

இங்கே யாரும் எதையும் மாற்றும் இல்லை! இருப்பதை அழிக்கவும் இல்லை! இருப்பதை நல்ல முறையில் கொண்டு சேர்க்கிறோம்! அம்புட்டே!
திருவாய்மொழி என்னும் தமிழ் வேதம் வந்ததால், உள்ளது எல்லாம் அழிந்து விட்டதா என்ன?
சுப்ரபாதம் வந்ததால் திருப்பள்ளியெழுச்சி ஒழிந்து போனதா என்ன?

//சுக்லாம் ப்ரதரம் ஸ்லோகத்தையும்
ஆனைமுகன் ஆறுமுகன் தேவாரத்தையும் சொல்லி
அதிர்வ ஒருவாட்டி அளந்து பாருங்க!
அப்புறம் பாஷைகளோட சக்தியப் பத்தி சொல்லுங்க//

சரி, அளந்துருவோம்!
எம்பெருமான் உலகம் அளந்த மாதிரி அவ்ளோ ஒன்னும் கடினமான செயல் இல்ல!

சுக்லாம் பரதரம் விஷ்ணும்-னும் பாடுறேன்! தேவார-பிரபந்தமும் ஓதறேன்! இரண்டையும் இங்கே ஒலிக் கோப்பாக வைக்கிறேன்! அளக்கறீங்களா? பார்த்து விடலாமா?

சுக்லாம் பரதரம் ஆச்சும் ஒழுங்காத் தெரியணும்! இல்லை தேவாரம் நன்கு அறியணும்! நீங்க இரண்டின் சாரமும் அறியாது, அழிக்காதீங்கோ, ஆக்காதீங்கோ-ன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க!

அதிர்வு ஒலியில்/ஒலிப்பில் இ்ருக்கு!
சுலோகங்களை அரைகுறையா, பணம் வருதே-ன்னு ஓதினா அதிர்வு இருக்காது! அப்போ என்ன சொல்றீங்க?
பிரபந்தத்தை ஆத்மார்த்தமாக நீட்டி, முழக்கி, சந்தையில் ஓதும் போது அதிர்வு அதிரும்!

பாடிக் காட்டட்டுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அருண் நிஷோர் பாஸ்கரன் said...
கண்ணன் உங்களிடம் ஒரு சந்தேகம்....//

சொல்லுங்க அருண்!

//அமெரிக்கா வில் உள்ள ஒரு கோவிலில் நமது ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்ச்சனை செய்தால் ஒத்து கொள்விர்களா?//

இங்கு தான் கொஞ்சம் புரிதல் வேண்டும்! திருப்பாவையை யாரும் அர்ச்சனை செய்வதில்லை! சாற்றுமறையில் ஓதுகிறார்கள்!

திருப்பாவையை ஆங்கிலத்தில் பலரும் மொழி பெயர்த்தும் உள்ளார்கள்! மொழியாக்குவதில் தவறே இல்லை!

நான் புருஷ சூக்தத்தைத் தமிழில் செய்து, எல்லாரும் இனி புருஷ சூக்தம் - தமிழ் வெர்ஷனைத் தான் ஓத வேண்டும் என்று சொல்லலையே!

ஆனால் நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது என்ன?
அர்ச்சனை! அர்ச்சனை என்றால் என்ன?

இறைவன் பெயர்களைக் கூறி, போற்றுவது! நாமாவளி!
தத்துவ சாரங்கள் எல்லாம் இல்லாமல் எளிமையான போற்றி தான் அர்ச்சனை!

அஷ்டோத்திர சத நாமாவளி அர்ச்சனைகளை எப்போது யார் செய்து வைத்தார்கள்? புராணம் மற்றும் நூற் குறிப்புகள் உண்டா? இல்லை ஒவ்வொரு அர்ச்சனையும் மகான்கள் ஆத்மார்த்தமாக எழுதிய காவியமா? அச்சோ, மூலத்தில் சொல்லப்பட்ட ஆத்ம அனுபவம் போய் விடுகிறதே என்று வருத்தப்பட முடியுமா?

அஷ்டோத்திர அர்ச்சனைகளை புதிதாக இப்பவும் எழுதி வைக்கிறாங்களே! ஒரு புது ஆலயம் துவங்கினால், அங்குள்ளது ஒரு விசேடமான மூர்த்தி என்றால், அதற்குத் தனியாக ஒரு விசேட அஷ்டோத்திரம், புதிதாகக் கூட எழுதி வைக்கும் வழக்கம் இருக்கே! என்ன, MA Sanskrit படித்தவரை வைத்து வடமொழியில் எழுதி வைத்து விடுகிறார்கள்!

அஷ்டோத்திரத்தில் என்னென்ன சாஸ்திரப் பிரமாணங்கள் உள்ளன என்று உங்களால் சொல்ல முடியுமா?

அர்ச்சனை மக்களுக்காக இறைவன் பேரில் செய்யப்படும் போற்றுதல் வழிபாடு!
மக்களுக்காகச் செய்யப்படும் ஒரு காம்யார்த்தமான கர்மானுஷ்டானத்தை, அவர்கள் புரிந்து கொள்ளும் படி இருந்தால் தான், தாங்கள் என்ன சங்கல்பித்துக் கொண்டு எதைச் செய்கிறோம் என்று மக்களால் உணர முடியும்!

தைர்ய, ஸ்தைர்ய
வீர்ய, விஜய,
ஆயுர், ஆரோக்கிய
என்று சங்கல்பிக்கும் போது...
தான் என்ன வேண்டிக் கொள்கிறோம் என்று ஒரு சாதகனுக்குத் தெரிய வேண்டும் அல்லவா?

தன் ஆயுள் வேண்டி, தன் நல்ல உடல் நலம் வேண்டி என்று ஒருவன் தெரியாமலேயே செய்து கொள்ளும் சங்கல்பம் என்ன பயன்?
பகவத் விஷயத்தை விடுங்கள்!
அவன் விஷயத்தையாவது அவன் அறிய வேண்டாமா?

அதைப் புரிந்து கொண்டால், உங்களுக்கு அர்ச்சனையின் தாத்பர்யம் புரிந்து விடும்!

G.Ragavan said...

மிக அருமையான பதிவு. மிகவும் தேவையான பதிவு. நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். சண்டையைப் போட்டு மண்டையை உடைப்பதை விட இப்படிப்பட்ட செயல்கள் நன்மையையே பயக்கும்.

அர்ச்சனையை ஆண்டவனுக்குச் செய்யவில்லை..அடியவர்களுக்குச் செய்கிறோம் என்பதை உணர்தலே நன்று. நீங்கள் கூறிய நீராவி மேக உவமை மிக அருமை. மேகத்து நீருக்கு ஆற்றில் இருந்து வந்தது..கடலில் இருந்து வந்தது என்றா தெரியும்? கடலில் இருந்தே வந்திருந்தாலும் உப்பின்றித்தானே இருக்கிறது.

தமிழில் செய்தால்..மற்ற மொழிக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வி வேறு. இப்பொழுது அர்ச்சனை என்ற பெயரில் நடப்பது ஏதோ எல்லாருக்கும் புரிவது போலவும்.. தமிழில் சொன்னால் தமிழனுக்கு மட்டுமே புரியும் என்று சொல்வதெல்லாம் காமெடி. அப்படியானால் முருகனும் முகுந்தனும் இந்தியர்களுக்கு மட்டுந்தானா? வெள்ளைக்காரன் வணங்க விரும்பினால்? அவர்களுக்கும் வடமொழி புரியுமா? ஆகையால் அவரவர் தாய்மொழியில் வணங்குவதே சிறந்தது. அருணகிரி கதறுகிறாரே...செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ.

// அருண் நிஷோர் பாஸ்கரன் said...

கண்ணன் உங்களிடம் ஒரு சந்தேகம்....அமெரிக்கா வில் உள்ள ஒரு கோவிலில் நமது ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்ச்சனை செய்தால் ஒத்து கொள்விர்களா? //

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டியதே. உள்ளமும் உணர்வும் புரிந்து வழிபடலே இறைவழிபாடு. திருவாசகம் மொழிபெயர்க்கப்பட்டதே. ஜி.யு.போப் செய்தாரே. எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்க்கும் கலையே கே.ஆர்.எஸ் இந்தப் பதிவில் சொல்லியிருப்பது. அதே போல கலைச் செல்வங்களின் சிறப்பை எட்டுந் திக்கு மட்டுமல்லாது எட்டுத்திக்கும் சென்று செல்ல அந்தந்த மொழிகளில் மாற்றுவது சரியானதே.

// நீங்களே சொன்னது போல கர்நாடக மாநிலத்தில் திருப்பாவையை தமிழில் தானே ஓதுகிறார்கள் கண்டத்தில் மொழி பெயர்த்து இல்லையே...அதே போல் சமஸ்கிருத ஸ்லோகங்களை அந்த மொழில் சொன்னால் தானே அழகு. அதை மொழி வடிவமாக பார்க்காமல் ஒலி வடிவமாக பாருங்களேன். //

ஒலிவடிவமாக என்ன பார்க்க? கோயிலில்...^&&*&*& நமக...*&*&((நமக என்றுதான் எனக்குக் கேட்கிறது. அதில் எந்த வடிவத்தைப் பார்ப்பது?

அப்பா டக்கர் அமீர்பர் said...

The sound " om" is the fundamental of all...matter and energy....LANGUAGE IS JUST A SOUND...IF YOU KNOW ENGLISH YOUR BRAIN DECODES THE SOUND WHEN YOU SPEAK/HEAR AND IT WILL MAKE YOU TO UNDERSTAND.. IF YOU DON'T KNOW ....ENGLISH OR ANY OTHER LANGUAGE, IT IS JUST A SOUND TO YOU. FOR EXAMPLE DOGS UNDERSTAND WHAT WE SAY..SIT MEANS DOG IS SITTING..BUT WE CAN'T ABLE TO UNDERSTATND DOG'S VOCAL SOUND....WHY?????...

To my knowledge,WHAT IS REALIZE IS, if you speak, you make a sound...and om is the fundamental of all...everthing goes in to it..whatever language you speak...god can decode it...because he created his universe from "om". ....OM DUT SUT....

SO.....LANGUAGE IS NOT A BARRIER or a constrain to communicate with god...IN WHAT LANGUAGE deaf and mute person will pray...

GOD IS BEYOND OF ALL ....SO IN TAMIL HE IS CALLED AS KADAVUL..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேள்வி-பதில் பக்கம் said...
The sound " om" is the fundamental of all...matter//

மிகவும் உண்மைங்க!

//EXAMPLE DOGS UNDERSTAND WHAT WE SAY..SIT MEANS DOG IS SITTING..BUT WE CAN'T ABLE TO UNDERSTATND DOG'S VOCAL SOUND....WHY?????...//

ஏன்னா நமக்கு நாயின் மொழியைப் புரிந்து கொள்ள அவசியம் இல்லை! நாய் எசமானராய் இருந்தால், இந்நேரம் நாயின் மொழியை, விழுந்தடித்துக் கொண்டே நாமே பயின்ரு இருப்போம்! :)))

//SO.....LANGUAGE IS NOT A BARRIER or a constrain to communicate with god...IN WHAT LANGUAGE deaf and mute person will pray...//

உண்மைங்க!
காது கேளாத ஒருவருக்கு, வடமொழில சொல்லித் தான் புரிய வைப்போம்-ன்னு அடம் புடிக்கிறோமா? இல்லையே! சைகை பாஷைல தான் சொல்லுறோம்? அப்படி தான் அவிங்களுக்கு செய்திகளும் வாசிக்கறாங்க!

அதைத் தாங்க சொல்லுறேன்!
அர்ச்சனை மக்களுக்காகச் செய்வது!
அதை மக்கள் புரிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்!

காது கேளாதோருக்கு, அவர்கள் சைகையில் செய்தி படிக்கணும்!
மக்களுக்கு அவரவர் புரிந்து கொள்வது போல் அர்ச்சனை படிக்கணும்!
அவ்ளோ தாங்க! As simple as that!

Archana is a service offering to customers!
Please do it in a way, that the customers can understand, what is beeing offered to them!


//GOD IS BEYOND OF ALL ....SO IN TAMIL HE IS CALLED AS KADAVUL..//

கடந்து + உள்ளவன் = கடவுள்
மொழியைக் கடந்தும் அவன் கடவுள்!
மொழியாய் உள்ளவனும் அவன் கடவுள்!
ஓம்!

Anonymous said...

// சமயத்தை நன்கு புரியுமாறு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கணம்னு நீங்களும் நம்புங்க!//

ஓகோ!!
அதுதான் தமிழில் இருக்கும் தேவார-திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை எல்லாத்துக்கும் தமிழ்ல விளக்கம் கொடுத்துக்கிட்டிருகீங்களா!?

ரொம்ம நல்லது!

தமிழுக்கே விளக்கம் கொடுத்துதான் புரியப் பண்ணனு இருக்கிறப்ப
எதுக்கு இப்ப இருக்கிற ஒழுங்கு முறைய மாத்தனும்.

நீங்க விளக்கம் கொடுக்கிறது எப்படியோ கொடுத்துதான் ஆகணும்.

அதனால நீங்க அவங்க காலம்காலம பண்ணிகிட்டிருக்கிறத கொழப்பாம

அவங்க பண்ணுறதுக்கே நேர விளக்கம் கொடுத்துடுங்களே.

இது உங்களுக்கு அவங்களுக்கு ஈசி.

இல்லாட்டி அவுங்களும் புதுசாபாடம் பண்ணணும்,

நீங்களும் மட்ராஸ்தமிழ் மதுரதமிழ்
ஈழதமிழ் ஐரோப்பாதமிழ் அமெரிக்கத்தமிழ் என்னு
ரொம்பத் தமிழ்ல மொழிபெயர்த்து முறியனும்

அப்புறம் உங்க இஷ்டம்.:)

ஆண்டவன் விளையாட்டின் ரகசியதை யாரோ அறிவார்.

நல்லதே நடக்கட்டும் நன்மையே
நன்மையே கிடைக்கட்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
ஓகோ!!
அதுதான் தமிழில் இருக்கும் தேவார-திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை எல்லாத்துக்கும் தமிழ்ல விளக்கம் கொடுத்துக்கிட்டிருகீங்களா!?//

ஹா ஹா ஹா!
உங்க கேள்வியில் கிண்டல் ஒலிக்கும் அளவுக்கு அக்கறை ஒலிக்கவில்லை!

திருப்பி நான் செய்யட்டுமா? பிரம்ம சூத்திரம் தான் வடமொழியில் இருக்கே! அதுக்கு எதுக்கு பாஷ்யம்?
வடமொழியில் இருப்பதற்கு வடமொழியிலேயே எதுக்குங்க விளக்கம் கொடுக்கணும்?


ஆச்சார்யர்கள் எல்லாம் என்ன ஒன்னும் அறியாதவர்களா? சங்கரர், இராமானுசர், மாத்வர்-ன்னு எல்லாரும் வரிஞ்சி கட்டிக்கிட்டு பாஷ்யம் பண்ணாங்களே! எதுக்குங்க?

தமிழ் நூல்களுக்கும் விளக்கம் எந்நாளும் வேண்டி இருக்கும் தான்! தமிழுக்கே விளக்கம் வேண்டி இருக்கே-ன்னு நக்கல் அடிப்பதில் ஒன்னும் வந்து விடாது!

//தமிழுக்கே விளக்கம் கொடுத்துதான் புரியப் பண்ணனு இருக்கிறப்ப
எதுக்கு இப்ப இருக்கிற ஒழுங்கு முறைய மாத்தனும்//

இங்கே யாரும் தமிழ்ப் பனுவல்களுக்கு பொருள் மட்டுமே சொல்லவில்லை!
விரித்துணர வைப்பது தான் விளக்கம்!
அதைத் தான் செய்கிறோம்!
ஹ்ருதய கமல வாசலைக் கொஞ்சம் திறந்து வச்சீங்கனா புரியும்!

உங்க லாஜிக்குக்கே வாரேன்!
வடமொழிக்கே விளக்கம் கொடுத்து, பாஷ்யம் எழுதித் தான் புரியணும்-னு இருக்குறப்போ, புரியற பாஷ்யத்தையே ஓதலாமே? எதுக்கு மூலமான வேதத்தை ஓதணும்? :))

//நீங்க விளக்கம் கொடுக்கிறது எப்படியோ கொடுத்துதான் ஆகணும்.
அதனால நீங்க அவங்க காலம்காலம பண்ணிகிட்டிருக்கிறத கொழப்பாம
அவங்க பண்ணுறதுக்கே நேர விளக்கம் கொடுத்துடுங்களே//

எதைக் காப்பாத்த இப்படிப் பேசறீங்க-ங்க? யாரு கொழப்பறா?
கொழப்பறது அடியேன் வேலை இல்லை-ன்னு சொல்லிட்டேனே! இங்கே நாம் பேசுவது மக்களுக்காகச் செய்யப்படும் அர்ச்சனை பற்றி மட்டும் தானே!

காலம் காலமா இதே அர்ச்சனையைத் தான் பண்றாங்களா?
Are you sure?

சவால்: அஷ்டோத்திரங்கள் யாரால் எழுதப்பட்டு, இல்லை எப்போது தொகுக்கப்பட்டன-ன்னு சாஸ்திரப் பிரமாணம் இருக்கா உங்களிடம்?
சொல்லுங்க பார்ப்போம்!

வேம்படி விநாயகர் கோயில்-னு இருக்கு! அங்கு செய்யும் அர்ச்சனையில்
ஓம் வேம்படி விநாயக ஸ்வாமினே நமஹ!
வேம்படி தீர வாசாய நமஹ-ன்னு வருதே!
Can you give me saasthra-kaalam kaalamaaga pannum reference for this word "vembadi"? :)

//நீங்களும் மட்ராஸ்தமிழ் மதுரதமிழ்
ஈழதமிழ் ஐரோப்பாதமிழ் அமெரிக்கத்தமிழ் என்னு
ரொம்பத் தமிழ்ல மொழிபெயர்த்து முறியனும்
அப்புறம் உங்க இஷ்டம்.:)//

எங்க இஷ்டம் ஒன்னும் இல்லீங்க!
அர்ச்சனை சங்கல்பம் பண்ணிக் கொள்ளும் மக்கள் இஷ்டம்!
எந்த ஊருத் தமிழனா இருந்தாலும் அடிப்படைத் தமிழ் தெரியும்! புரியும்!

அதுனால ரொம்ப எல்லாம் முறிய வேண்டியதில்லை! கவலைய விடுங்க!
காலம் காலமாப் பண்ணும் அர்ச்சனை அஷ்டோத்திர reference மட்டும் எனக்கு மறக்காமக் கொடுங்க!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் கடவுள் said...
இந்துகடவுளை வழிபட அமெரிக்கர்கள் ஆங்கிலம் தான் வசதியென்றெண்ணினால் செய்துகொள்ளட்டுமே. உமக்கென்ன பிரச்சனை?//

நான் கடவுள் ஐயா...
அமெரிக்கர்கள் மட்டும் இல்லை!
அமெரிக்காவில் வாழும் அர்ச்சகர்களே அமெரிக்காவுக்கு ஏத்தா மாதிரி சுலோகங்களை மாத்திக்கறாங்க! தெரியுமா? :)

ஜம்புத்வீபே,
பரத கண்டே,
பாரத வர்ஷே-ன்னு
சங்கல்ப மந்திரங்களை, இடத்துக்குத் தகுந்தா மாதிரி...

க்ரெளஞ்ச த்வீபே,
அமேரிக்கா கண்டே,
ரமணக வர்ஷே,
மிசி சிப்பி, மிஸ்ஸொவ்ரீ சகல ஜீவ நதீ தீரானாம்...
ன்னு சொல்லுவாங்க! கேட்டுப் பாருங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
மிக அருமையான பதிவு. மிகவும் தேவையான பதிவு. நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். சண்டையைப் போட்டு மண்டையை உடைப்பதை விட இப்படிப்பட்ட செயல்கள் நன்மையையே பயக்கும்//

வாங்க ராகவா வாங்க!
ஊர்-ல இருந்து வந்தாச்சா? எனக்குப் பஞ்சாமிர்தம் ப்ளீஸ்! :)

//அர்ச்சனையை ஆண்டவனுக்குச் செய்யவில்லை..அடியவர்களுக்குச் செய்கிறோம் என்பதை உணர்தலே நன்று.//

சங்கல்பத்தை அடியார்க்குச் செய்கிறோம்!
அவ்வாறு செய்த பின், அர்ச்சனையை, அடியார்கள் ஆண்டவனுக்குச் செய்கிறார்கள்!

//நீங்கள் கூறிய நீராவி மேக உவமை மிக அருமை//

ஹா ஹா! இப்பல்லாம் ரொம்பவே யோசிக்கிறேன் ராகவா! :))

//தமிழில் செய்தால்..மற்ற மொழிக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வி வேறு. இப்பொழுது அர்ச்சனை என்ற பெயரில் நடப்பது ஏதோ எல்லாருக்கும் புரிவது போலவும்..//

அதான் சொல்லுறாரே, அனானி ஐயா!
எப்படியும் தமிழே கூடப் புரியப் போவதில்லையாம்!
அதுனால காலம் காலமா இருக்குறது அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!
எதுக்கு நாம எல்லாம் கொழப்பறோம்?
திருந்துவோம்! திருந்துங்க ராகவன்! நான் கூடத் திருந்தப் போகிறேன்! :)))

//அருணகிரி கதறுகிறாரே...
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ//

அவர் வெறும் அருணகிரி!
அவர் ஸ்ரீலஸ்ரீ ஜகத்குரு அருணாச்சல சம்பந்தாச்சார்ய மகாபுருஷர் அல்லவே! அதுனால கதறிக்கிட்டே தான் இருக்கணும்! :(

//நீங்களே சொன்னது போல கர்நாடக மாநிலத்தில் திருப்பாவையை தமிழில் தானே ஓதுகிறார்கள் கண்டத்தில் மொழி பெயர்த்து இல்லையே...//

இது அருணுக்கான பதில்:
திருப்பாவையை மக்களிடம் சங்கல்பம் வாங்கிக் கொண்டு, யாரும் அர்ச்சனை செய்வதில்லை! அதனால் கன்னடம் செய்யபடவில்லை! அர்ச்சனை அப்படி அல்ல!

திருப்பாவையைக் கன்னடத்தில் மொழி பெயர்க்கலாம், தப்பில்லை! ஓதியும் பார்க்கலாம், தப்பில்லை! திருப்பாவைக் கருத்துக்களைக் கிட்டத்தட்ட அப்படியே புரந்தரதாசர் பாடுகிறார்! இராமானுச நூற்றந்தாதியை அன்னாமாச்சார்யர் தெலுங்கில் ஒரு கீர்த்தனை ஆக்கி உள்ளார்! இருங்க தேடிச் சொல்கிறேன்!

//ஒலிவடிவமாக என்ன பார்க்க? கோயிலில்...^&&*&*& நமக...*&*&((நமக என்றுதான் எனக்குக் கேட்கிறது. அதில் எந்த வடிவத்தைப் பார்ப்பது?//

ஒலி வடிவமாப் பாருங்க!
அதிர்வு இருக்கு!
- இப்படியே எம்புட்டு நாள் தான் சொல்லிக்கிட்டு இருக்கப் போறாங்களோ?

இருங்க ராகவா! ஒரு யோசனை வந்திருக்கு! தனி ஒலிப்-பதிவாப் போடுறேன்!

Anonymous said...

//பிரம்ம சூத்திரம் தான் வடமொழியில் இருக்கே! அதுக்கு எதுக்கு பாஷ்யம்?
வடமொழியில் இருப்பதற்கு வடமொழியிலேயே எதுக்குங்க விளக்கம் கொடுக்கணும்?//

சூத்திரமென்றாலே சூக்சுமம் என்றுதானே பொருள்.
அதற்கு பேரறிவாளர்களால் மட்டும் தான் விள்க்கம் கொடுக்க முடியும் அதனால் தான்.


//தமிழுக்கே விளக்கம் வேண்டி இருக்கே-ன்னு நக்கல் அடிப்பதில் ஒன்னும் வந்து விடாது!//

நக்கல் நளினம் ஒன்னும் இல்லீங்க தமிழ் மந்திரம்ன்னாலும் விளக்கம் கொடுத்துதானே புரிஞ்கனும்
அதனால் அவங்க இப்ப பண்ணிக்கிட்டிருக்கிறதுக்கே விளக்க கொடுத்திட்டீங்கன்னா
இரண்டு பேருக்குமே கஷ்டமில்லாம போயிடுமேன்னுதா சொன்னேங்க.

//எதைக் காப்பாத்த இப்படிப் பேசறீங்க-ங்க?//

நம்மளயே அந்த ஈசன் காப்பத்தனும்,
நாம என்னத்த காப்பாத்துறது
என்னத்த அழிக்கிறது.


நமக்காக மணிக்கவாசகருக்கிட்ட
கோவை, பாவை எல்லாம் கேட்டு வாங்கிக் கொடுத்த
சிவனார் எதனால் தமிழ் அர்ச்சனை மந்திரம் வாங்கி தரல்ல.

சென்ற இடமெல்லா வென்ற சைவதமிழ் சம்பந்தர்
அரிய பெரிய பைந்தமிழ் பொக்கிசங்களைத் தந்த மாணிக்கவாசகர்
சிவனார் தோழர் செந்தமிழ் சுந்தரர்.

இன்னும் எவ்வளவோ சக்திவாய்ந்த பைந்தமிழ் பெரியோர்கள் ஏன் அவர்கள் எல்லோரும்
ஆலய அகவிடயங்களில் கை வைக்கவில்லை.

காரணமின்றி காரியமில்லை
காரியமின்றி காரண்மில்லை.

காரண காரியம் நமக்குப் புரியாமல் இருக்கலாம்.

எமது சிற்றறிவுக்கு பட்டதே சரியென்றெண்ணி
அடித்து நொறுக்காமல் இருப்பதே அறிவுடமை.___/\___

Raghav said...

தாமதமாக வந்ததால் உள்ளேன் ஐயா மட்டும் சொல்லிக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க அனானி ஐயா

//இன்னும் எவ்வளவோ சக்திவாய்ந்த பைந்தமிழ் பெரியோர்கள் ஏன் அவர்கள் எல்லோரும்
ஆலய அகவிடயங்களில் கை வைக்கவில்லை//

வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில், ஆலய ராஜகோபுரக் கதவுகளை மூடி வைத்து விட்டு, குறுக்கு வழியில் சென்று கொண்டிருந்தனர். கேட்டால் வேதங்களே கதவை அடைத்து விட்டன என்று சொல்லி விட்டார்கள்.

இதை அப்பரும் சம்பந்தரும் சேர்ந்து பாடி, மாற்றவில்லையா? ஆலய அக விஷயங்களில் கை வைக்கவில்லையா? என்ன பேசறீங்க?

மக்கள் நலன் கருதித் தானே இப்படிச் செஞ்சாங்க! தமிழில் அர்ச்சனையும் இதே வகை தான்! இதுக்கு என்ன சொல்றீங்க?

//அதற்கு பேரறிவாளர்களால் மட்டும் தான் விள்க்கம் கொடுக்க முடியும் அதனால் தான்//

அர்ச்சனைக்கு அப்படி இல்லையே?
பேரறிவு எல்லாம் தேவை இல்லாத எளிமையான போற்றி தானே! அப்புறம் ஏன் தயக்கம்?

உங்களிடம் ஒரு கேள்வி:
தமிழில் சங்கல்பமும் அர்ச்சனையும் செய்தால் என்ன ஆகும்?
சாஸ்திர மாறுபாடுகள், அபசாரங்கள் உருவாகுமா? அதன் பாதகங்களை அறியத் தருவீர்களா?

குமரன் (Kumaran) said...

அட ஆமாம். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கன்னு எத்தனையோ முறை பாடியிருந்தாலும் இதுவரைக்கும் ஐந்தெழுத்தில் தான் இந்தத் திருமுறை தொடங்குகிறது என்று கவனிக்கவே இல்லை. ஒரு வேளை பதிவில் இதை எழுதியிருந்தால் சிந்தித்திருப்பேனோ என்னவோ? அப்போது தானே ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொரு எழுத்தாக எண்ணிப் பார்க்கிறோம்?! :-)

கோகழி - திருப்பெருந்துறை எந்த ஊர் என்று சட்டென்று நினைவிற்கு வரவில்லை. ஆவுடையார் கோவில் என்பார்களோ? அங்கே தான் சிவலிங்கம் இல்லை; அம்பாள் இல்லை; ஆவுடையார் மட்டுமே உண்டு என்று படித்த நினைவு.

அண்ணித்தல் என்றால் நெருங்கி நிற்றல்; நெருங்கி வருதல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இரவி.

பிஞ்ஞகன் என்றால் பீலி அணிந்தவன் என்றோ பினாகத்தை ஏந்தியவன் என்றோ பொருளா? வேறு பொருள் வருமென்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு இடத்திலும் ஒப்புமை காட்டியவர் புறத்தார்க்குச் சேயோன் என்னும் போது எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள்' மறந்து போனதா? :-)

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொல்லும் ஆழ்வார் ரொம்ப பொல்லாதவரா இருப்பார் போலிருக்கே. கலியனோ? :-)

முகவை மைந்தன் said...

படித்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நமக்காக மணிக்கவாசகருக்கிட்ட
கோவை, பாவை எல்லாம் கேட்டு வாங்கிக் கொடுத்த
சிவனார் எதனால் தமிழ் அர்ச்சனை மந்திரம் வாங்கி தரல்ல//

அட என்னாங்க...விடிய விடிய இராமாயணம் கேட்டுப்புட்டு,..
அதான் பதிவில் மாணிக்கவாசகர் தமிழ் அர்ச்சனை செய்யறாரே! நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க-ன்னு!

//இன்னும் எவ்வளவோ சக்திவாய்ந்த பைந்தமிழ் பெரியோர்கள் ஏன் அவர்கள் எல்லோரும்
ஆலய அகவிடயங்களில் கை வைக்கவில்லை//

இன்னொன்னும் சொல்லிக்கிறேன் ஐயா!
திருவரங்கம் ஆலயத்து ஆகமத்தையே மாற்றி ஆக்கினாரு இராமானுசர்! இது ஆலய அக விஷயத்தில் கை வைத்தது ஆகாதா? தமிழ்ப் பாசுரங்களைக் கருவறையில் ஓத வழி வகுத்துக் கொடுத்தது என்னவாம்? ஆலய அக விஷயத்தில் கை வைக்கவில்லையா?

//எமது சிற்றறிவுக்கு பட்டதே சரியென்றெண்ணி
அடித்து நொறுக்காமல் இருப்பதே அறிவுடமை//

என் அறிவு சிற்றறிவு தானுங்க!
ஆனால் ஆழ்வார் ஆசாரியர்கள், நாயன்மார்கள் அன்பும் அறிவும் அப்படியல்ல! அவர்களுக்குச் சரி என்று பட்டதைத் தான் அடியேன் சொல்கிறேன்!
எதையும் அடித்து நொறுக்கவில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அனானி ஐயா இன்னும் வரலை போல!

அடியேன் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!
காரணமின்றி காரியமில்லை
காரியமின்றி காரண்மில்லை
என்று பொத்தாம் பொதுவாகப் பேச வேண்டாம்!

தமிழில் அர்ச்சனை செய்வதில் காரணமில்லை! காரியமில்லை! இதனால் ஆகம விதிகள் பாதிக்கப்படும்! இதானால் இன்னின்ன அருள் முயற்சிகளுக்குக் குந்தகம் ஆகும்! அபசாரங்கள் விளைய வாய்ப்புண்டு என்பதை அறியத் தரவும்!

அப்படித் தந்தால்,
அது சரியாக இருக்கும் பட்சத்தில்,
தமிழ் அர்ச்சனை தேவையில்லை என்று வெளிப்படையாகப் பதிவிடுகிறேன்!
அறியத் தாருங்களேன்! தருவீர்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
தாமதமாக வந்ததால் உள்ளேன் ஐயா மட்டும் சொல்லிக்கிறேன்//

குமரன், உங்களை ராகவ், ஐயான்னு கூப்புடுறாரு பாருங்க! :)

Raghav said...

//குமரன், உங்களை ராகவ், ஐயான்னு கூப்புடுறாரு பாருங்க! :)//

ஹா..ஹா.. என்னை.. அதுவும் இந்த ராகவனை மாட்டி விட பாக்குறீங்களோ..அதுதான் நடக்காது.. ஏன்னா,
"குமரன் - பெயரில் மட்டுமில்லை வயதிலும் தான்"
குமரன் ஐயா இல்லை, குமரன் பையா ன்னு வேணும்னா சொல்லலாம்..

சொந்தக்காரங்களை (?!) பிரிக்க திட்டம் தீட்டுறீங்களோ..

Anonymous said...

"தெய்வத்தின் குரல்" லில் இந்தப் பக்கத்திலே மந்திரங்களின் மகிமையை மிக அழகாக விளக்கியுள்ளார்
மகா ஸ்வாமிகள்.

http://www.kamakoti.org/tamil/part1kural38.htm

உலகத்தில எந்த நாட்டில இருந்தாலும் கோவிலுக்குள்ள போனோன்னாக்க

கணகண என்கிற மணிசத்தம், கமகம ஊதுவத்தி வாசண இத்தோட மந்திர சத்தமு சேந்தாக்கதா ஊர் கோவிலுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கும்.

நாடு, தேசம் வேறு வேறானாலும் ஆலயங்களில் வேத, ஆகமம் முறைகள் மாறுபடாமல் இருப்பது அவசியம்.

மன ஒருமைப் பாட்டுக்கு மிகமிக அவசியம்.


//ஆலய அக விஷயங்களில் கை வைக்கவில்லையா? என்ன பேசறீங்க?//

அவங்களும் வெளி கதவ மாத்திர தான் திறந்து மூடினாங்க.

ஆலய அக விஷயங்கள்ல ஒன்னும் கை வைக்கல்லைங்க!

குடுகுடுப்பை said...

மிக அருமையான பதிவு, இறைவனை வழிபட இறைவனால் அவன் பெற்ற மொழியால் வழிபடுதலே சாலச்சிறந்தது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் இந்து மதம் இதனையும் ஒரு நாள் ஏற்று தானாக அது வளரும்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஐயா அனானியாரே...

நீங்க உங்க ஊர் பேரு, போன் நம்பரை கே.ஆர்.எஸுக்கு மட்டுமாவது தனி மடல்ல தந்துடுங்கய்யா....

அவரு நாந்தான் அனானியா வருவதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க ஐயா!
பரமாச்சார்யரின் அருமையான சுட்டியைத் தந்தமைக்கு நன்றி!

//வேத, ஆகமம் முறைகள் மாறுபடாமல் இருப்பது அவசியம்//

தமிழ் மந்திரங்கள் ஓதினால் ஆகமம் முறைகள் மாறுபடுமா? எந்த முறை மாறி விடும்? சொல்லுங்களேன்!
எல்லா ஆகமத்துலயும்
1. சார்யாகமம்
2. க்ரியாகமம்
3. யோகம்
4. ஞானம்
-ன்னு நான்கு பிரிவுகள் இருக்கு!
இதில் எது பாதிக்கப்படும் தமிழ் மந்திரம் ஓதினால்? சொல்லுங்கள்!

குமரன் (Kumaran) said...

//திருவரங்கம் ஆலயத்து ஆகமத்தையே மாற்றி ஆக்கினாரு இராமானுசர்! இது ஆலய அக விஷயத்தில் கை வைத்தது ஆகாதா? //

அனானி ஐயா/அம்மா. இதனைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
"தெய்வத்தின் குரல்" லில் இந்தப் பக்கத்திலே மந்திரங்களின் மகிமையை மிக அழகாக விளக்கியுள்ளார்
மகா ஸ்வாமிகள்//

மகா ஸ்வாமிகள் அதில் தமிழ் மந்திரங்களைப் பிரித்துச் சொல்லவில்லையே! அனைத்து மந்திரங்களின் மகிமையையும் தான் சொல்லி உள்ளார்!

//கணகண என்கிற மணிசத்தம், கமகம ஊதுவத்தி வாசண இத்தோட மந்திர சத்தமு சேந்தாக்கதா ஊர் கோவிலுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கும்//

அதே அதே!
அடியேன் சொல்வதும் அதே!

//அவங்களும் வெளி கதவ மாத்திர தான் திறந்து மூடினாங்க//

அப்போ வெளிக்கதவு கோயிலின் ஒரு பாகம் இல்லீங்களா? ராஜ கோபுரக் கதவாச்சே! அது அக விஷயம் இல்லியா?
ராஜ கோபுரமே சிவலிங்க சான்னித்யம் ஆச்சே! அப்படித் தானே ஆகமம் சொல்லுது?


சரி, அகவிஷயம்=கருவறை விஷயம் என்றால்....
அதற்கு மற்ற உதாரணங்களைச் சொன்னேனே! திருவரங்க ஆகமம் மாறியது பற்றி! அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

இன்னும் பெருமாள் மூர்த்தத்தையே, மக்களின் நன்மைக்காக மாற்றி அமைத்த ஆழ்வார் பற்றிச் சொல்லட்டுமா? இல்லை சிவாகமம் பற்றி மட்டும் பேசனும்-னாலும் அடியேன் விசாரித்துச் சொல்கிறேன்!

இப்போதைக்கு எனக்குத் தெரிந்தது: உக்ர மூர்த்தியான அம்பாளுக்குச் சில பல மந்திரங்களை, மகான் அப்பைய தீட்சிதர் சொல்லி, நிறுத்தப்பட்ட கதைகளும் உண்டு!

உங்களுக்கு ஒரே கேள்வி தான்!
தமிழ் மந்திரங்கள் ஓதினால் ஆகமம் முறைகள் மாறுபடுமா? எந்த முறை மாறி விடும்?
அதை நீங்கள் எடுத்துச் சொன்னால், தமிழ் மந்திரங்கள் குறித்த என் தவறான கருத்தைத் திருத்திக் கொள்கிறேன்! சொல்லி உதவுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
சொந்தக்காரங்களை (?!) பிரிக்க திட்டம் தீட்டுறீங்களோ..//

தோடா!
நீங்க கேள்விக்குறியில் போட்டுட்டு...இந்த வம்பு வேறயா? :)

////குமரன், உங்களை ராகவ், ஐயான்னு கூப்புடுறாரு பாருங்க! :)//

//"குமரன் - பெயரில் மட்டுமில்லை வயதிலும் தான்"
குமரன் ஐயா இல்லை, குமரன் பையா ன்னு வேணும்னா சொல்லலாம்..//

சூப்பரு! அப்படியே மெயின்டையின் பண்ணிக்கோங்க!
குமரன், Mission Accomplished! பேசியபடி கமிஷன் தொகை ப்ளீஸ்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குடுகுடுப்பை said...
மிக அருமையான பதிவு//

நன்றிங்க குடுகுடுப்பை!

//மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் இந்து மதம் இதனையும் ஒரு நாள் ஏற்று தானாக அது வளரும்//

சரியாச் சொன்னீங்க!
காலம் காலமாக, மக்களுக்கு ஏற்றாற் போல், ஒவ்வொரு ஆகமமும் எப்படி அருளாளர்களால் திருத்தி அமைக்கப்பட்டது என்று தெரிந்து கொண்டால், இப்படி வீணான ஐயங்கள் எழாது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஐயா அனானியாரே...
நீங்க உங்க ஊர் பேரு, போன் நம்பரை கே.ஆர்.எஸுக்கு மட்டுமாவது தனி மடல்ல தந்துடுங்கய்யா....//

ஹா ஹா ஹா!

//அவரு நாந்தான் அனானியா வருவதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு...//

சேச்சே! சும்மாக் கலாய்ச்சேண்ணா!
நீங்க அ+நானி! நான் என்பதை நீக்கிய அத்வைதி (அல்லிருமையாளர்)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்லும் ஆழ்வார் ரொம்ப பொல்லாதவரா இருப்பார் போலிருக்கே. கலியனோ? :-)//

அவரே தான்!
திருமங்கையாழ்வார் தான் ராபின்ஹூட் ஆழ்வாராச்சே! :)


//முகவை மைந்தன் said...
படித்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்//

மிக்க மகிழ்ச்சி முகவை மைந்தன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஒரு வேளை பதிவில் இதை எழுதியிருந்தால் சிந்தித்திருப்பேனோ என்னவோ? அப்போது தானே ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொரு எழுத்தாக எண்ணிப் பார்க்கிறோம்?! :-)//

அதான் பதிவுலக மாயை!
அத்வைத விளக்கத்துக்கு இந்த மாயை பற்றியும் எடுத்துச் சொல்லுங்க! :)

//கோகழி - திருப்பெருந்துறை எந்த ஊர் என்று சட்டென்று நினைவிற்கு வரவில்லை. ஆவுடையார் கோவில் என்பார்களோ?//

சூப்பர்!
அதே அதே!
மாணிக்கவாசகருக்கு மட்டூம் தான் அங்கே பூசனை/விழா எல்லாம்!

//அண்ணித்தல் என்றால் நெருங்கி நிற்றல்; நெருங்கி வருதல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இரவி.//

சரி குமரன்!
அண்மை x சேய்மை-ன்னு பார்த்தால் நீங்க சொல்வதும் சரி தான்!
ஆகமம் ஆகி, மக்களிடையே அர்ச்சாவதாரமாய் இன்னும் நெருங்கி நிற்பான் அல்லவா!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

//பிஞ்ஞகன் என்றால் பீலி அணிந்தவன் என்றோ பினாகத்தை ஏந்தியவன் என்றோ பொருளா? வேறு பொருள் வருமென்று நினைக்கிறேன்//

என்ன பொருள் வரும் குமரன்?

//ஒவ்வொரு இடத்திலும் ஒப்புமை காட்டியவர் புறத்தார்க்குச் சேயோன் என்னும் போது எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள்' மறந்து போனதா? :-)//

அப்புறம் இது சிவன் பாட்டா, சீராமன் பாட்டா-ன்னு சந்தேகம் வந்துரும்! அதான் 50% மட்டும் ஒப்புமை காட்டினேன்! :))

ஒப்புமை காட்டுவது தவறா குமரன்? நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல இடங்களில் கருத்தொருமிப்பது நல்லா இருந்திச்சி! அதைக் காட்டலாம் நினைச்சேன்?
தவறு, இங்கே தவிர்க்கலாம்-ன்னா சொல்லுங்க! அப்படியே செய்து விட்லாம்!

குமரன் (Kumaran) said...

//ஒப்புமை காட்டுவது தவறா குமரன்? நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல இடங்களில் கருத்தொருமிப்பது நல்லா இருந்திச்சி! அதைக் காட்டலாம் நினைச்சேன்?
தவறு, இங்கே தவிர்க்கலாம்-ன்னா சொல்லுங்க! அப்படியே செய்து விட்லாம்!
//

இதைத் தவறு என்று வேறு யார் சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன். நமக்குத் தெரிந்ததைத் தானே எழுத முடியும். யாரைப் பற்றி எழுதினாலும் அருணகிரி இப்படிச் சொல்கிறார்; நக்கீரர் இப்படிச் சொல்கிறார் என்று நம் நண்பர் ஒருவர் எப்போதும் முருகனைப் பற்றி தானே சொல்லுவார். அவரிடன் 'ஏனையா நான் பெருமாளைப் பற்றி தானே எழுதினேன்; சிவனைப் பற்றி தானே எழுதினேன்; அம்மையைப் பற்றி தானே எழுதினேன். ஏன் முருகனை இழுத்துக் கொண்டு வருகிறீர்?' என்று என்றாவது கேட்டதுண்டா? மற்றவர்களாவது கேட்டதுண்டா? எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் கூடலில் நிறைய இருக்கின்றன. அவரைப் போலவே நீங்களும் உங்களுக்குத் தெரிந்ததை, சட்டென்று நினைவிற்கு வருவதைச் சொல்வதில் எந்த தவறும் இல்லை; பிழையும் இல்லை.

G.Ragavan said...

// அவங்களும் வெளி கதவ மாத்திர தான் திறந்து மூடினாங்க.

ஆலய அக விஷயங்கள்ல ஒன்னும் கை வைக்கல்லைங்க! //

:) என்னது ஆலய அக விஷயங்கள்ள கை வைக்கலையா? ரொம்ப எளிமையான எடுத்துக்காட்டு சொல்லட்டுமா?

சிவாச்சாரியார் ஆகம விதிகளின்படி வழிபாடு செய்த சிவனுக்குப் பன்றிக்கறி படைத்தாரே கண்ணப்பர். அப்பொழுது ஆகம முறைகளும் அக விஷயங்களும் கெட்டுப் போகிறதே என்று அழுதாரே அந்தச் சிவாச்சாரியார். ஆனால் என்னாயிற்று? கல்லால் அடித்தான் ஒருவன்..சொல்லால் அடித்தான் ஒருவன்... வில்லால் அடித்தான் ஒருவன்..மிதித்தான் ஒருவன் என்றுதானே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு நாயன்மாரின் மனைவி திருக்கோயிலில் ஆவுடையார் மீதே எச்சில் துப்பினாரே :) அப்பொழுது எங்கு போயிற்று அகவிதிகள்?

அதெல்லாம் சரி. ரவி கேட்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்லுங்களேன். தமிழில் அர்ச்சனை செய்தால் என்னாகும்?

G.Ragavan said...

புறத்தார்க்குச் சேயோன்றன் என்பதற்கு எனக்குத் தோன்றும் பொருள் என்னவென்றால்....

அகத்தார்க்கு அருகில் இருப்பவன் இறைவன். அதை விடுத்து புறத்தே மட்டும் வழிபடுகின்றவர்களுக்குச் சேயோன்றன் அவன். அதாவது தொலைவானவன்.

இறைவனை உள்ளத்தில் வணங்கல் வேண்டும். "மனத்தினால் சிந்தித்து" என்கிறாளே ஒருத்தி. நெஞ்சகமே கோயில் என்றாரே ஒருத்தர். உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை...அங்கு உருவாகும் அன்பிற்கோற் பஞ்சமில்லை என்று எழுதினானே ஒரு கவிஞன். ஆகா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ஜிரா
//சிவாச்சாரியார் ஆகம விதிகளின்படி வழிபாடு செய்த சிவனுக்குப் பன்றிக்கறி படைத்தாரே கண்ணப்பர்//

அதை ஒத்துக்க மாட்டாங்க ராகவா!
ஏனென்றால் ஆது ஆலயத்துச் சிவலிங்கம் இல்லை! காட்டில் உள்ள சிவலிங்கம்! ஆகம விதிகளுக்குக் கட்டுப்படாத, பொது மக்கள் வணங்க வராத Personal Worship சிவலிங்கம்-ன்னு சொல்லிடுவாங்க!

//ஒரு நாயன்மாரின் மனைவி திருக்கோயிலில் ஆவுடையார் மீதே எச்சில் துப்பினாரே :) //

ஆகா...
நல்ல வேளை நினைவூட்டீனிங்க!
உயிர் காப்பான் தோழன்!

அந்த நாயனார் பேரு திருநீலநக்க நாயனார்! அது கருவறைச் சிவலிங்கம் தான்!

பூசையின் போது, சிலந்தி விழுந்து விடும் சிவலிங்கம் மீது! அந்த அம்மா குழந்தைகள் மீது பூச்சி பொட்டு விழுந்தா என்ன பண்ணுவாங்களோ, அப்படியே ஊதி விட்டாங்க! அப்போ எச்சில் தெறித்து விட்டது!

நாயனார், மனைவியின் செயலால் வெகுண்டு, "தீட்டாயிடுத்தே"-ன்னு கோபித்துக் கொண்டார். அம்மையார் ஈசனை வேண்ட, நாயனார் கனவில் ஈசன் தோன்றினார்!

எச்சில் பட்ட இடம் தவிர, சிவலிங்கத்தின் மற்ற பாகமெல்லாம் சிலந்தி விஷம் ஏறி இருந்தது! பதறி எழுந்த நாயனார் அப்போது தான் உள்ளத்து அன்பின் மேன்மையைப் புரிந்து கொண்டார்!

அதற்காக போவோர் வருவோர் எல்லாம் கருவறைக்குள் சென்று சிவலிங்கம் மேல் எச்சில் துப்பச் சொல்ல முடியுமா? ஆகமம் பொதுச் சட்டம், but every rule has an exception! அன்பாகமம் தான் அதி உத்தம ஆகமம்!

ஜிரா
இன்னோன்னு கவனிச்சீங்களா இந்தத் திருநீலநக்க நாயனார் சரிதத்தில்?
1. அக்காலத்தில் தேர்ந்த பெண் பூசாரிகள் கருவறைக்குள் செல்லும் வழக்கம் இருந்துள்ளது.
2. ஆகமங்களில் அதற்கு இடமும் இருந்துள்ளது. இப்பொது மட்டும் எப்படி மாறியது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
புறத்தார்க்குச் சேயோன்றன் என்பதற்கு எனக்குத் தோன்றும் பொருள் என்னவென்றால்

அகத்தார்க்கு அருகில் இருப்பவன் இறைவன். அதை விடுத்து புறத்தே மட்டும் வழிபடுகின்றவர்களுக்குச் சேயோன்றன் அவன். அதாவது தொலைவானவன்//

அருமை ராகவா, அருமை!
அகத்துக்குள் இருப்பவனுக்கு அகம் தானே அண்மை! புறம் சேய்மை அல்லவா!
அகத்துள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் புறத்தே அவ்வளவு சீக்கிரமாவா வருகிறது? எனவே புறம் தொலைவு தான் :))

இதை இன்னொரு முறையிலும் நோக்கலாம்!

சேயோன் என்றால் தொலைவானவன் என்று பார்க்கவே தேவை இல்லையே!
சேயோன்=முருகன்
சேயோன்=சிவந்தவன்=சிவன்!

புறத்தார்க்குச் சிவந்த சிவன்!
அகத்தார்க்குச் சீவனான சிவன்!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் அல்லவா?

//உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை...
அங்கு உருவாகும் அன்பிற்கோற் பஞ்சமில்லை என்று எழுதினானே ஒரு கவிஞன்//

ஆகா!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...
என்ன ஒரு பாட்டு! அறுபடை வீடுகள் மட்டும் தானா?
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு, உன், சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு!!

அறுபடை வீடும் ஒரு படை வீடாகி விடாதா அகத்துக்குள்ளே!
புறத்தார்க்குச் சேயோன்! அகத்தார்க்கு அண்ணிப்பான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இதைத் தவறு என்று வேறு யார் சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன்//

அ.உ.ஆ.சூ ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்னா மாதிரி!
நன்றி! நன்றி!

//என்று என்றாவது கேட்டதுண்டா? மற்றவர்களாவது கேட்டதுண்டா?//

:)

//எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் கூடலில் நிறைய இருக்கின்றன//

:)

Geetha Sambasivam said...

ஜம்புத்வீபே,
//பரத கண்டே,
பாரத வர்ஷே-ன்னு
சங்கல்ப மந்திரங்களை, இடத்துக்குத் தகுந்தா மாதிரி...

க்ரெளஞ்ச த்வீபே,
அமேரிக்கா கண்டே,
ரமணக வர்ஷே,
மிசி சிப்பி, மிஸ்ஸொவ்ரீ சகல ஜீவ நதீ தீரானாம்...//

பாரதத்தில் இல்லாதபோது, பூகோள ரீதியாக மாறுபட்ட இடத்தில் இருக்கும்போது அந்த இடத்தின் காலங்களையும், அந்தச் சமயத்தின் வார, திதி, நட்சத்திரங்களையும் தான் சொல்லவேண்டுமே, தவிர, பாரத வர்ஷே, பரத கண்டே என்று இங்கே சொல்றாப்போல் சொல்ல முடியாது. ஆகவே மாற்றித் தான் சொல்லுவார்கள், சொல்ல வேண்டும், சொல்லுவார்கள். மேலும் பாரத வர்ஷம் என்பது அகண்ட பாரதம், அதிலே தென்பகுதியான தென்னிந்தியா தான் பரத கண்டம் எனக் குறிப்பிடப் படும். இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது சொல்லணும்னு தோணிச்சு, சொல்லிட்டேன். :)))))

Geetha Sambasivam said...

அமெரிக்கா, பாரத வர்ஷமும் இல்லை, பரத கண்டமும் இல்லை :))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
அந்த இடத்தின் காலங்களையும், அந்தச் சமயத்தின் வார, திதி, நட்சத்திரங்களையும் தான் சொல்லவேண்டுமே, தவிர, பாரத வர்ஷே, பரத கண்டே என்று இங்கே சொல்றாப்போல் சொல்ல முடியாது. ஆகவே மாற்றித் தான் சொல்லுவார்கள், சொல்ல வேண்டும், சொல்லுவார்கள்.//

நன்றி கீதாம்மா! சரியாச் சொன்னீங்க! கையைக் குடுங்க! :)

அந்தந்த இடத்தின் காலங்களுக்கு ஏற்றாற் போலத் தானே சொல்ல வேண்டும்?
காலத்துக்காக, இடத்துக்காக மந்திரம் மாற்றி உரைக்கப்படும் போது, மக்களுக்காகவும் மாற்றி உரைக்கலாம் அல்லவா?

அடியேன் சொல்வது சரி தானே?

தமிழில் சங்கல்ப/அர்ச்சனையை (உறுதிமொழி/துதியை) மாற்றித் தான் சொல்லுவார்கள், சொல்ல வேண்டும், சொல்லுவார்கள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல பதிவு ரவி.
நாம் மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டேயிருப்பதை விட நாம் ஏதாவது முயற்சிக்கலாம் அல்லவா?

(என்)அம்மா திருமுறைகளிலிருந்து தொகுக்கப்பட்ட 108 சிவ நாமங்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்;ஆர்வமிருப்பின் தட்டச்சி அனுப்புகிறேன்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறிவன்#11802717200764379909 said...
நல்ல பதிவு ரவி.
நாம் மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டேயிருப்பதை விட நாம் ஏதாவது முயற்சிக்கலாம் அல்லவா?//

நிச்சயம் அறிவன்!
இது இரு முனை முயற்சி!
ஒன்று விழிப்புணர்வு! இன்னொன்று தமிழ் முயற்சி!

//(என்)அம்மா திருமுறைகளிலிருந்து தொகுக்கப்பட்ட 108 சிவ நாமங்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்;ஆர்வமிருப்பின் தட்டச்சி அனுப்புகிறேன்....//

ஆகா...அவசியம் அனுப்புங்கள்! இங்கேயே பதிவிடுவோம்!

கண்ணன் பாட்டு பதிவில் சங்கல்ப மந்திரங்கள் தமிழானது!
எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி, திருமடங்கள் பார்வைக்குத் தருவோம்! அரசுக்கும் petition online மூலமாக முயற்சிக்கலாம்!

தமிழ் அர்ச்சனையில் அதிர்வு இருக்கா என்பதை ஒலிப் பதிவாகவே சில நாட்களில் இடுகிறேன்!

Unknown said...

அதிர்வோடு பாடினால்தான் இறைவன் கேட்பானா, அவ்வையார், அருணகிரியார், நால்வர் பெருமக்கள், 12 ஆழ்வார்கள்,63 நாயன்மார்களும் தமிழில் பாடித்தானே இறைவன் திருவடி சேர்ந்தனர், தமிழ் மொழியில் அதிர்வுள்ள வார்த்தைகள் இல்லை என்று யார் சொன்னது, நாங்கள் நமசிவாய என்றால் நீங்கள் நமஷிவாய என்பீர்கள், சரவணபவ என்றால் ஷரவணபவ என்பீர்கள் தமிழ் எழுத்து கலப்பில்லாமல் சமஸ்கிருதம் பேச முடியுமா? சிந்தித்து பதில் சொல்லவும்