Monday, November 17, 2008

பெண் ஒருத்தி பாடிய தேவாரம்! - Iconographic Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட மிக நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! நல்லடியார்கள்! தொண்டில் சிறந்தவர்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற பின்புலம் ஏதும் இல்லாமல் ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!
கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ, இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று கலங்கிய ஒரு சாதாரண வீட்டுப் பெண்மணி இவள்!
கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(



மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


அவன் யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு அவள் பேரே புனிதவதி!
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது! கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதவதி தான் புனிதள் ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(

தில்லைச் சிற்றம்பலத்து இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ? ஆனால் இன்றும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! :(

புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...
அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....

பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?

ஆண்டாளின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன், புனிதவதியின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்!
வைணவ இலக்கியத்தின் மொழி, சாதி, பெண்மை, சமூகம் என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்!
யம்மா புனிதவதி, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை!
தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதலில் பிரபலப்படுத்திவர்களில் அம்மையாரும் ஒரு முன்னோடி!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்களான D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.
ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்! என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர்! சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் அம்மையாரின் நூல்கள், நூல் அமைப்பு கருதி, பதினோராம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!
திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன!
அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை!
ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது
என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயானத் திருக்கோல நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், யாரேனும் அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்! ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? அன்பர்கள் யாரேனும் சொல்லுங்கள்!
அந்தப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்! அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்; மதி=நிலவு/அறிவு;
அரா=அரவு (பாம்பு)

திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்.
திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
இந்தப் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது!
மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்! ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! இந்தியாவில் மட்டும் தானா இது? பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
இரண்டுமே ஒரே தோற்றம் கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி என்றும் தெரியும்!
இருந்தாலும், இது பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது மதி என்று "ஒன்றாகத்" தேறாது!
மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் மனதின் கீழான இச்சை, மேலான நெறி என்றும் ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு ***
திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)

16 comments:

S.Muruganandam said...

//தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதலில் பிரபலப்படுத்திவர்களில் அம்மையாரும் ஒரு முன்னோடி!//

பதிகத்திற்க்கும் முன்னோடி அம்மையார்தான்.

கணவன் அம்மையாரை கைவிட்டாலும், ஆண்டவன் கைவிடவில்லை, என்றும் ஐயனின் திருவடி நீழலில் அம்மையார் நித்ய வாசம் செய்கிறார். அம்மை தாளம் போட ஐயன் அதற்கேற்ப ஆடுகின்றார். இதை இட வேறு என்ன பேறு வேண்டும் ஐயா. பதஞ்சல்லி வலப்புறம் நடுவில் அம்மையார் இடப்புறம் வியாக்ரபாதர் எப்போதும் நித்யமாக ஐயனின் பாதத்தில் நின்றுள்ளனரே.

கார்த்திகை சோமவார வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kailashi said...
கணவன் அம்மையாரை கைவிட்டாலும்//

கணவன் மட்டுமல்ல,
அவர்கள் மொத்த சமூகமே அம்மையாரைக் கைவிட்டது என்பது தான் அடியேன் வருத்தம்!

//ஆண்டவன் கைவிடவில்லை//

இறைவன் யாரையுமே கைவிடுவதில்லை! நல்லார் பொல்லார் இருவருக்கும் நடு நின்ற நடு!

//ஐயனின் திருவடி நீழலில் அம்மையார் நித்ய வாசம் செய்கிறார். அம்மை தாளம் போட ஐயன் அதற்கேற்ப ஆடுகின்றார். இதை இட வேறு என்ன பேறு வேண்டும் ஐயா//

மிகவும் உயர்ந்த பேறு தான் கைலாஷி ஐயா! அதை மறுக்கவில்லை!

சம்பந்தர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் என்று மற்ற பலரும் குடும்ப சகிதமாகத் தாளம் போட, அதற்கும் தானே ஐயன் ஆடுகிறான்?

ஈசன் திருவடி நீழலில் அம்மைக்கு என்றுமே இடம் உண்டு!
நான் சுட்டிக் காட்ட விரும்பியது சமூகத்தின் போலி பக்தியின் தன்மையை மட்டுமே!

கார்த்திகைச் சோமவாரம் என்று தான் இப்பதிவை இட்டேன்! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

S.Muruganandam said...

//இறைவன் யாரையுமே கைவிடுவதில்லை! நல்லார் பொல்லார் இருவருக்கும் நடு நின்ற நடு!//

கர்மவினை என்று கூறி எல்லாம் அவன் விதித்தது அவன் இச்சைப்படியே நடக்கின்றது, நடுவில் வரும் கணவன், மனைவி, தாய், தந்தை, சகோதரன், மக்கள் என்னும் எல்லா உறவும் மாயைதான் என்று எடுத்துக்கொண்டால் சமூகம் கைவிட்டால் என்ன, கணவன் கை விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதானே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kailashi said...
கர்மவினை என்று கூறி எல்லாம் அவன் விதித்தது அவன் இச்சைப்படியே நடக்கின்றது...
சமூகம் கைவிட்டால் என்ன, கணவன் கை விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதானே?//

புனிதவதியின் கர்ம வினையாக அது இருக்கலாம்! ஆனால் அதையே காரணமாகச் சொல்லி, அந்தச் சமூகம் தப்பித்துக் கொள்ள முடியாது.

இங்கே இரு பார்வைகள்
* புனிதவதியின் கர்ம வினை - அது ஆன்மீகப் பார்வை
* பெண்களின் ஆன்மீகத் தன்மை - இது சமூகப் பார்வை!

கணவனின் புனிதத் தன்மையை மதிக்கும் சமூகம், மனைவியின் புனிதத் தன்மையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! மனைவி தன்னை விட புனிதளாக இருந்தால், அவளைக் கும்பிட்டு ஓடி விடும் எஸ்கேபிசம் கூடாது என்பது தான் சொல்ல வந்தேன்!

குமரன் (Kumaran) said...

முதன்முதலாக அம்மையின் பாடலைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் இரவி. நல்ல விளக்கம். மதி ஒன்றும் இல்லா அரவு தானே.

Kavinaya said...

நல்ல விளக்கம் கண்ணா. மதி ஒன்றும் இல்லா மனிதா -ன்னும் மாத்திக்கலாம். நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// குமரன் (Kumaran) said...
முதன்முதலாக அம்மையின் பாடலைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் இரவி//

மெளலி அண்ணா காரைக்கால் அம்மையார் ஜெயந்தியின் போது போட்ட பதிவில், கொஞ்சம் பாடல்களைப் போட்டிருந்தார்-ன்னு நினைக்கிறேன்!

//நல்ல விளக்கம். மதி ஒன்றும் இல்லா அரவு தானே//

அரவின் பெயர் தெரியுமா குமரன்? வாசுகி, அனந்தன், ஆதிசேடன் என்பது போல் ஏதாச்சும் பேரு இருக்கா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
நல்ல விளக்கம் கண்ணா. மதி ஒன்றும் இல்லா மனிதா -ன்னும் மாத்திக்கலாம்//

நன்றிக்கா!
ஆமாம் மதி "ஒன்று"படாத மனிதா தான்! :)

குமரன் (Kumaran) said...

நீங்கள் மீண்டும் கேட்ட பின் கூகிளாண்டவரைக் கேட்டேன். அவர் சொன்னது:

காதுகளில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: பத்மன், பிங்களன்
தோள்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: கம்பளன், தனஞ்செயன்
கரங்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: அஸ்வதரன், தக்ஷகன்
இடுப்பைச் சுற்றிய அரவின் பெயர்: நீலன்.

கழுத்தைச் சுற்றும் அரவின் பெயரை அந்தப் பக்கம் சொல்லவில்லை. மேலே உள்ள தகவல் வாமன புராணத்தில் இருப்பதாக அந்தப் பக்கம் சொல்கிறது.

http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-Shiva.htm

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தோள்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: கம்பளன், தனஞ்செயன்//

சூப்பர்! இதுக்குத் தான் குமரன் வேணும்ங்கிறது!
சைவச் செம்மல் குமரன் வாழ்க! வாழ்க! :)

நன்றி குமரன்! தோளில் என்பதைக் கழுத்தில் என்றும் கொள்ளலாம்-ன்னு நினைக்கிறேன்!

//கரங்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: அஸ்வதரன், தக்ஷகன்//

இதே தக்ஷகன் பெயர் கொண்ட பாம்பு தானே பரீட்சித்தையும் தீண்டும்?

குமரன் (Kumaran) said...

சைவச் செம்மல் என்ற பெயர் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும். அவர் இப்போதெல்லாம் பேசுவதில்லை.

பரிட்சித்துவைத் தீண்டிய பாம்பிற்கும் தட்சகன் என்ற பெயரைப் படித்ததாகத் தான் நினைவு.

கருடாழ்வாரின் திருமேனியில் இருக்கும் பாம்புகளில் ஒன்றிற்கும் தட்சகன் என்ற பெயரைப் படித்ததாக நினைவு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
சைவச் செம்மல் என்ற பெயர் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும்//

அவர் சண்முகச் செம்மல்!

//அவர் இப்போதெல்லாம் பேசுவதில்லை//

ஒன்று விடாமல் தனியாக அலசி, அடியேனுடன் தனியாகச் சண்டை போடுகிறார்! :)

//கருடாழ்வாரின் திருமேனியில் இருக்கும் பாம்புகளில் ஒன்றிற்கும் தட்சகன் என்ற பெயரைப் படித்ததாக நினைவு//

ஹூம்!
பாம்புகளின் பங்கு எம்புட்டு இருக்கு பாருங்க நம் இறையியலில்!

விநாயகர் இடுப்பில் நாகம்
சிவனார் கழுத்தில் நாகம்
முருகன் காலடியில் நாகம்
பார்வதி அன்னையின் மோதிரம்
பெருமாள் பள்ளி கொள்ளும் ஆதிசேஷன்
பாற்கடலில் வாசுகி
இந்திரசித்து நாகாஸ்திரம்
கர்ணன் நாகாஸ்திரம்
கண்ணன் காளிங்க நர்த்தனம்
இன்னும் வேறென்ன?....

மனிதன் அல்லாத வேறு எந்த உயிரினத்துக்கும் இவ்வளவு குறிப்பிடல்கள் சமயத்தில் நான் பார்த்தது இல்லை!

sa said...

அருமையான பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

தமிழ்முருகன் said...

மிகவும் அருமையான blog. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் !!

Anonymous said...

Nice post and this mail helped me alot in my college assignement. Gratefulness you on your information.

Arivan said...

அருமையான பதிவு!

ஒரு வேண்டுக்கோல்.

"தொண்டில் சிறந்தவர்கள்! அவ்வளவு தான்!" என்று மற்ற நாயன்மார்களை சிருமைப்படுத்தக்கூடாது.

ஒவ்வொரு நாயன்மார்களுக்கும் தனித்தனியான சிரப்பும் பெருமையும் உண்டு.
அதனால்தான் அவர்கள் நாயன்மார்கள், சிவபெருமானை அடைந்தார்கள்.

நன்றி.
சிவசிவ..