Sunday, August 17, 2008

மாணிக்கவாசகர் திருவாசகம்: நல்ல அர்ச்சனையைத் தமிழில் செய்ய முடியுமா?

இங்கே தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! எங்கள் வீட்டில் நாங்க"ளும்" குடியிருப்போம்! ஹா ஹா ஹா! உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல!
நம்ம வீட்டில் நண்பர்க"ளும்" குடியிருக்கலாம்-னு சொன்னா அது அன்பு! நாங்க"ளும்" குடியிருப்போம்-னா அது அசட்டுத்தனம்!

நல்ல வேளை, அது போன்ற அறிவிப்புப் பலகைகளைத் தமிழக அரசு, திருக்கோயில்களில் இருந்து எடுத்து விட்டது! சட்ட திட்டம் எல்லாம் போட்டு விட்டது!
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?
சரி, இவ்வளவு வீறாப்பு பேசறோமே! நாமே ஆலயத்துக்குச் செல்லும் போது, எத்தனை பேர், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்? கையைத் தூக்குங்க பார்ப்போம்!

பதிவில் எழுதி விளாசுகிறோமே! ஆனால் நேராப் போகும் போது, நமக்கு அப்படிப் பண்ணத் தோனுதா?
அர்ச்சகர்கள் மேல் மட்டும் விரலை நீட்டுகிறோம்! நம் மேலும் கொஞ்சம் நீட்டிக் கொள்ளலாம் அல்லவா?
ஹிஹி! தப்பில்லை! விரலை கொஞ்சம் நீட்டிக் கொள்ளுங்கள்! நானும் நீட்டிக் கொள்கிறேன்!

சென்ற முறை சென்னை சென்ற போது (Apr-2008), ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தான் இவ்வாறு செய்ய முடிந்தது! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்!
அதுவும் அங்கிருந்தவர் நண்பர்! அடியேன் கேட்டுக் கொண்டதால், சுருக்கமாக ஆண்டாள் போற்றியைச் சொல்லி அர்ச்சனை செய்து வைத்தார்! திருமயிலை கபாலீச்வரத்தில் இதே போல் முயன்றேன்! முடியவில்லை! எனக்கு அங்கு யாரையும் தெரியவும் இல்லை!

இத்தனைக்கும் வைணவ ஆலயங்களில், கருவறைக்குள்ளே தமிழைக் காலம் காலமாக ஓதுகிறார்கள்! ஆனால் அங்கு கூட, அர்ச்சனை மட்டும், தமிழில் காண்பது அரிது தான்!
இந்த உண்மையை அடியேன் வெட்கத்துடன் சொல்லியே ஆக வேண்டும்!
ஒரே ஆறுதல்: அர்ச்சனை முடிந்த பின் காட்டப்படும் கற்பூர ஆரத்தியில், தமிழ்ப் பாசுரம் சொல்லித் தீபம் காட்டுகிறார்கள்! மக்களுக்குப் புரிவது போல், பெருமாளின் வைபவத்தைத் தமிழில் சொல்கிறார்கள்!


ஆனால் மெளலி அண்ணாவுடன் கர்நாடக மாநிலம் - மேலக்கோட்டைக்குச் சென்றிருந்தேன்!
அங்கு கவர்ந்ததே பயிற்சிப் பள்ளி என்னும் குருகுலம் தான்!
கன்னடப் பாடல்கள், தமிழ்ப் பாசுரங்கள், வடமொழி சுலோகங்கள் பயிற்றுவிக்கப் படுவதாக அறிவிப்பிலும் கண்டேன்!
கன்னடக் கோயில் தான்! ஆனால் தமிழ்மொழிக் காழ்ப்பு இன்றி, அருளிச் செயல்கள் பயிற்சி!
(அதைப் பார்த்து விட்டு, மனம் மகிழ்ந்து, கோயில் உண்டியலில் தற்காலிகமாகக் காசு போடாதீங்க-ன்னு சொன்ன நானே, காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன்! அதுக்கு மெளலி அண்ணா என்னை ஓட்டித் தள்ளுனது தனிக்கதை :)

இத்தனைக்கும் அப்போது காவிரி உண்ணாவிரதப் போராட்டம்!
மேலக்கோட்டை இராமானுசர் சன்னிதியில், "பூ மன்னு மாது பொருந்திய மார்பன்" என்று என்னால் தமிழில் உரக்க ஓதிப் பாட முடிந்தது!
எந்தக் கன்னடத்தாரும் வந்து தடுக்கவில்லை! இந்த நிலை தமிழகத்திலும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம்மூருல தில்லையில் தமிழ்ப் பாட்டு பாடவே இல்ல தடுமாற வேண்டி இருக்கு?

அர்ச்சனை என்பது மக்களுக்காகச் செய்வது!
இறைவனைப் போற்றினாலும், சங்கல்பம் என்னும் உறுதிப்பாட்டில் மக்கள் பெயரை அல்லவா கேட்டு வாங்குகிறார்கள்?
மக்களுக்குச் செய்வது, மக்கள் உணர்வது போல் செய்தால் தான் இன்னும் நலம்!

வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மறுமலர்ச்சிகள், மனமலர்ச்சிகள் உருவாவதில்லை! இதற்கு மக்களை உணர வைக்கணும்! அதை அரசு செய்யுமோ?
கொள்கை அறிவிப்போடு எல்லாம் முடிந்து விடும்! கூடவே சில பயிற்சி நிலையங்கள்! அவ்வளவு தான்! உண்டியல் எண்ணவே நேரம் சரியாக இருக்கே! :)

அரசின் சாதனைகளைப் பெரிய பெரிய புகைப்படம் போட்டு, பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆளுயர கட்-அவுட்டுகள், நியான் போர்டுகள் எல்லாம் செய்யும் அரசு!
ஆனால் அதே உண்டியல் பணத்தில் கொஞ்சம் எடுத்து, மக்களைத் தமிழ் அர்ச்சனை செய்யுமாறு சொல்லும் விளம்பரங்கள், விழிப்புணர்வுகள் - இதெல்லாம் செய்யுமா? ஓ...ஓட்டுகள் பெற்றுத் தராத எதுவும் வீண் செலவு அல்லவா? :)

ஹிஹி! சரி சரி விடுங்க! ஆன்மீக இயக்கங்கள் தான், தம் தொண்டால் இதைச் செய்யணும்! வெறுமனே அம்பலம் ஏறி, நாலு பதிகம் பாடுவதோடு கடமை முடிந்தது என்று போய் விடக் கூடாது! இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், காலமெல்லாம் நிலைக்கும்! முயற்சி திருவினை ஆக்கும்!


கொஞ்ச நாளைக்கு முன்னால் ஜீனியர் விகடன் இதழ் சார்பாக, நெல்லையில் தமிழ் அர்ச்சனை செய்ய முனைந்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின!
சில அர்ச்சகர்களுக்குத் தமிழில் அர்ச்சனை செய்யவே தெரியவில்லை!
ஒரு வேளை வேண்டுமென்றே இப்படி முரண்டு பண்ணுகிறார்களோ என்று சந்தேகம் வந்தது! புத்தகத்தைப் பார்த்துச் செய்யுங்கள் என்று சொன்னார்களாம்!

அரசு வெளீயீடு புத்தகத்தைத் தேடு, தேடு-ன்னு தேடினது தான் மிச்சம்!
அர்ச்சகர்களிடமும் இல்லை! கோயில் அலுவலகத்திலும் இல்லை! அறநிலையத் துறை அலுவலரிடமும் இல்லை! அப்புறம் வந்ததான்னும் தெரியலை! :(
சரி, நாமும் தேடுவோமே-ன்னு அறநிலையத் துறை வலைத் தளத்தில் தேடினேன்! சுத்தம்! ஒன்னுமே இல்லை! வழக்கமான தமிழ் அர்ச்சனை எங்கள் மூச்சு என்ற வாய்-அர்ச்சனை மட்டும் தான் இருக்கு! :)

பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒருவரின் தந்தை எனக்கு உதவினார்;
எப்படியோ தேடிப் பிடித்து ஒரு புத்தகம் கைக்கு கிடைத்தது! பார்த்ததும் நானே அதிர்ந்து போய் விட்டேன்!
- மந்திரங்களுக்கான தமிழ்ப் பொருளே அதில் இல்லை!
புலவர்களை வைத்து எழுதச் சொல்லி இருக்கிறார்கள் போல! அவர்களும் அவர்கள் புலமையை நல்லாக் காட்டியிருக்கிறார்கள்! அம்புட்டு தான்! மந்திரப் பொருள் ஒன்றுமே இல்லை!


ஓம் மயூர வாகனாய நமஹ = இதுக்கு இணையான தமிழ் மந்திரமே காணோம்! மயில் வாகனம் இல்லாமல் முருகப் பெருமானுக்கு ஒரு அர்ச்சனையா?

ஓம் அக்ஷய பலப் ப்ரதாய நமஹ = வரம் தரும் கரமே போற்றி! வரம்-தரும்-கரம்-ன்னு ரைமிங்கா, எகனை மொகனையா தமிழ்ப் புலவர் எழுதிட்டாரு! பாவம், அவரைக் குறை சொல்ல முடியாது!
என்றும் நீங்காத நல் நிறைவை அருள வேணுமே போற்றி!
ஒரு குடும்பஸ்தர் நிம்மதி தேடித் தானே கோயிலுக்கு வருகிறார்? அவருக்கு நிறைவைச் சொல்லும் மந்திரம் இல்லையா? அடப் பாவமே!

நூலைத் தமிழாக்கிய பின் குன்றக்குடி அடிகளாரிடமோ, இல்லை ஜீயர்கள், துறைவர்கள், ஆதீன கர்த்தர்கள், அருளாளர்களிடமோ காட்டுவது இல்லையா? இது என்ன மொழிப் போட்டிக்கும் வீம்புக்கும் செய்வதா?
ஆண்டாளைக் கேட்டிருந்தா, அக்ஷய பலப் ப்ரதாய நமஹ = "நீங்காத செல்வம் நிறைந்தேலோ போற்றி"-ன்னு கொடுத்திருப்பாளே!

புதுசாக் கூட எதுவும் எழுத வேணாமே! மாணிக்கவாசகரும், அருணகிரியும் செய்து விட்டுப் போயிருக்கிறார்களே! அதை அப்படியே காப்பி & பேஸ்ட் பண்ணாக் கூடப் போதுமே! நிறைவான பொருள் வந்து விடுமே!
மறை ஒலிகளுக்கா தமிழில் பஞ்சம்? மந்திரமாவது நீறு! தந்திரமாவது நீறு-ன்னு இருக்கே!
திவ்ய சரணார விந்தயோஹோ = அளந்தாய் அடி போற்றி என்று திருவடி அர்ச்சனையைத் துவக்குகிறாளே கோதை! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க-ன்னு அர்ச்சிக்கிறாரே மணிவாசகர்!

** இது குறித்து அறநிலையத் துறை ஆணையருக்கும், முதல்வர் கலைஞருக்கும் தனி மடல் ஒன்று அனுப்பலாம்-னு நினைச்சேன்! - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொல்லுங்கள்! ***
சரி, இன்னிக்கி மாணிக்கவாசகர் செய்யும் தமிழ் அர்ச்சனையைப் பாருங்கள்! அப்பறம் நீங்களே தமிழ் அர்ச்சனை தான் வேணும்-னு கேட்டு வாங்கிச் செய்வீங்க!


சென்ற மூன்று பதிவுகளில் மூவர் தேவாரங்களைப் பார்த்தோம்! இன்னிக்கு திருவாசகம்! திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்! அப்படி ஒரு வாசகம்! இதோ, இளையராஜா பாடுவதைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்! (raaga.com! விளம்பரத்தைத் தள்ளி விட்டு, Track Position=06:00 to 07:30, வரை இந்தப் போற்றி உள்ளது)
இல்லையேல், இதோ, ஓதுவார் பாடுவது!
nama_sivaya_vazhga...

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!


துவங்குவதே திருவைந்தெழுத்தில் தான்! பஞ்சாட்சரம்! = நமசிவாய!
திருவாசகமே ஐந்தெழுத்தில் தான் துவங்குகிறது! வேறெந்த திருமுறைக்கும் இப்படி அமையவில்லை! இது தான் திருவாசகத்தின் சிறப்பு!

அதனால் தான் வாதவூரன் சொல்ல, நாம் எழுதியது என்று ஈசனே தன் கைப்படத் திருக்கடைக்காப்பிட்டு அருளினான்! அவனுக்கே தெரியும் தன்னை விடத் தன் நமசிவாய நாமம் தான் உயர்ந்தது என்று!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்! என்பார் அப்பர் சுவாமிகள்!
முதலில் நாமம், அப்புறம் தான் மூர்த்தி! அன்று நடுச்சபையிலே பெண்ணுக்குக் கை கொடுத்தது திருநாமம்! வராத இறைவனையும், வர வைத்தது திருநாமம்!

அடுத்து நாதன் தாள் வாழ்க = இறைவனின் திருவடிகள்! அதற்குத் தான் வாழ்த்து!
இன்னும் இறைவனை இவர் வாழ்த்தவே இல்லை பாருங்க! திருநாமமும், திருவடியும் தான் பாடிக்கிட்டு இருக்காரு!
திருப்பல்லாண்டில் பெரியாழ்வாரும் இப்படியே அருளிச் செய்துள்ளார்! பல்லாண்டு, பல்லாண்டு,...உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு! - உனக்குக் காப்பு இல்லை! உனது திருவடிகளுக்குத் திருக்காப்பு!

பெரியாழ்வாரும் மாணிக்கவாசகரும் வெவ்வேறு கால கட்டங்கள்! இருந்தும் ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதிரி சிந்திக்க முடிந்தது?


கோகழி=திருப்பெருந்துறை என்னும் ஊர்! அங்கு தான் இறைவன் மெளன குருவாய் மாணிக்கவாசகருக்கு உபதேசம் காட்டி அருளினார்! நன்றி மறவாமல் ஊரைப் பாடுகிறார்! இநத ஊரு எங்கே இருக்கு, இக்காலப் பேரு என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! இந்த ஊரில் லிங்கம் கிடையாது, அம்பாள் கூட சிலை இல்லை! பாதங்கள் மட்டுமே! எல்லாப் பூசையும் மாணிக்கவாசகருக்குத் தான்!

ஆகமம் ஆகிநின்று = ஆகமம் என்பதெல்லாம் தேவையா? என்று இன்னிக்கி மெத்தப் படித்தவர்கள், படிக்காமலேயே கேள்வி எழுப்புவார்கள்! :)
ஆனால் மணிவாசகர் அப்படியில்லை! இறைவன் எங்கும் இருக்கிறான் தான்! ஆனால் விளிம்பு நிலை மாந்தர்களான நாம் அவனை எப்படித் தரவிறக்கம் செய்து கொள்வது?

* அணுக்கள் எங்கும் இருக்குது தான்! ஆனா அணு உலையில் தானே மின்சாரம் வரும்?
** பசுவின் உடலில் பால் எங்கும் இருக்கு தான்! ஆனால் காம்பில் மட்டும் தானே பால் வரும்?

வீட்டில் இருக்கும் தெய்வமும், கருவறைத் தெய்வமும் ஒன்னு தான்! ஆனால் கருவறைத் தெய்வம், நாம் மட்டும் அல்லாது, பல அடியார்கள் சேவித்து உருகிய சான்னித்யம்! அதனால் தனிநலத் தெய்வ உருவத்தை விட, பொதுநல தெய்வ உருவத்துக்குச் சாந்நித்யம் அதிகம்!
அடுத்த முறை ஆகமங்களைக் கேலி செய்யாதீர்கள்! கருவறையில் ஃபோட்டா புடிக்க விடாத ஆகமம் எங்களுக்கு வேணாம்-னு எல்லாம் பேசாதீங்க! ஆகமத்தைப் புரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்!

அண்ணிப்பான் = இனிப்பான்! அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவினுக்கே என்பார் மதுரகவியாழ்வார்! அப்படி ஆகமம் ஆகி நின்று இனிப்பவன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் = ஒன்றாய், பலவாய் இருப்பவன் ஈசன்! அந்த இறைவன் அடி வாழ்க!



வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


வேகமாய் அலைபாயும் மனத்தை அடக்கி ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிஞ்ஞகன் = பீலி அணிந்தவன்! பினாகம் என்னும் வில், பிஞ்ஞகமானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! பினாகம் வில்லை உடையவன் ஈசன்! அருள் பெய்யும் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் = அண்மை x சேய்மை = அருகில் x தொலைவில்!
புறத்தார்க்குத் தொலைவில் தான் நிற்பானாம்! இது மணிவாசகர் கருத்து!
கை குவித்து வணங்குபவர்! கைகளைத் தலை மேல் குவித்து வணங்குபவர்! இவர்கட்கு மகிழ்வும், ஓங்கு பெருமையும் தரும் திருவடிகள் போற்றி!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

தேசன்=தேசு/ஒளி பொருந்தியவன்! நிமலன்=குற்றமில்லாதான்!
ஆராத இன்பம்=பசி ஆறிடும்! செல்வமும் ஒரு நாள் ஆறிப் போகும்! எது ஆறாது? சிவ மங்கள இன்பம் ஆறாது! ஏன்? அது ஆராத ஒன்று! அதாச்சும் தெவிட்டாத ஒன்று! அது நித்ய விபூதி!

மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே இப்படி!
இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! பேசாம இதையே அரசு எடுத்து வெளியிட்டு இருக்கலாம்!

எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! வாழ்க!!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! போற்றி!


சீரார் பெருந்துறை சிவபெருமான் திருவடிகளே சரணம்! - திருச்சிற்றம்பலம்!

Sunday, August 10, 2008

சுந்தரர் தேவாரம்: நண்பனை மறந்தாயோ? பொன்னியின் செல்வனில் எங்கே வருகிறது?

ஒருத்தர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, திடீரென்று சென்னை வருகிறார்! வேலை மிகுதி! சென்னையில் இருக்கும் தன் ஆருயிர் நண்பனைக் கூப்பிடக் கூட முடியவில்லை! ஆனால் சென்னை நண்பருக்கோ ஞான மூக்கு இருக்கு! :)
நண்பன் நம்ம ஊருக்குத் தான் வந்துள்ளான் என்பதை எப்படியோ ஞான மூக்கில் மோப்பம் பிடித்து விட்டார்! உடனே என்ன செய்வார், சொல்லுங்க?

"டேய், எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களோ?" என்று கெஞ்சலாம் - இது ஒரு வழி!
நண்பன் வீட்டுக்குப் போயி "பளார்" என்று கன்னத்தில் கொஞ்சலாம் - இது இன்னொரு வழி! :)
ஆனால் சங்கரன் அன்று ஏனோ கொஞ்சவில்லை! கெஞ்சிக் கொண்டு இருந்தான்!
எந்த சங்கரனா? ஹிஹி! தஞ்சை மாவட்டம், திருமழபாடி என்னும் ஊரில் குடியிருக்கும் ஒரு சங்கரன் தான்!
ஈசனுக்கே தோழன், அந்தரங்க விஷயங்களைக் கூட ஈசனிடம் பேசக் கூடிய பக்தர்! அடிச்சுக்குவாங்க, அணைச்சிக்குவாங்க!
இப்படி எல்லாம் நட்பு கொள்ளக் கூடிய தம்பிரான் தோழர்கள் = சிவபெருமானும்-சுந்தர மூர்த்தியும்!

சுந்தரர் அப்போது கொள்ளிடக் கரையின் சிவத் தலங்களை எல்லாம் தரிசிக்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார். திருவையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்கள்.
அன்று இரவு திருவாலம்பொழில் என்னும் ஊரில் ராத்தங்கல் (நைட் ஸ்டே)! அடுத்த நாள் கொள்ளிடக் கரையைக் கடந்து போக வேண்டும்! சுந்தரருக்கு ராத்தூக்கம் வரவே இல்லை!



நள்ளிரவில் திடீர் என்று ஒரு குரல்! கெஞ்சு குரல்!
"சுந்தரா, என்னை மறந்தனையோ? மழபாடிக்கு வர மறந்தனையோ??"

சுந்தரர் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார். உடன் வந்த பக்தர்கள் குழாம் எல்லாம் என்னவோ ஏதோ என்று விழித்துக் கொண்டனர்.
"இங்கே மழபாடி என்று ஏதாச்சும் ஊர் இருக்கா?" - ஊர் மக்களிடம் சுந்தரர் வினவுகிறார். மக்கள் திருமழபாடியில் உள்ள வயிரத்தூண் நாதரைப் பற்றிச் சொல்கிறார்கள்!

ச்சே நண்பனையா மறந்தோம்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது! பொழுது பொல பொலவென்று புலர்கின்றது...நண்பனைக் காண ஓடோடிச் செல்கிறார் சுந்தரர்!

"டேய், உன்னை மறப்பேனாடா? என்ன பேச்சு பேசற நீயி? வைரத்தூண்-னு உனக்குப் பேரு! உன் வைராக்கியமும் வைரம் போலவே தான் இருக்கு!
என் மேலே கோபம்-ன்னா, இந்தா, நாலு அறை அறைஞ்சிரு! அதுக்காகப் பேசாம எல்லாம் இருக்காதே!
ஒரு முறை என்னை நேருக்கு நேராத் தான் பாரேன்! அப்புறம் தெரியும் உன் வீம்பு எல்லாம்!
உன்னை அல்லால் வேறு யாரைடா நினைக்கப் போகிறேன்? அன்னே உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?"

திருச்சிற்றம்பலம்!
Sundarar_Thevaram_...

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!

திருச்சிற்றம்பலம்!

இதாங்க எளிமையான பொருள்:
பொன் போல் சிவப்பா இருக்கும் என் சிவப்பா!
புலிதோலை இடையில் கட்டிக்கிட்டு இருக்காய்! உன் தலையில் உள்ள சடாமுடியில், கொன்றைப் பூ மின்னுகிறது!
வாராது வந்த நட்பின் மாமணியே! மழபாடியில் குடியிருக்கும் மாணிக்கமே!
உன்னை அல்லாமல் வேறு யாரை நினைக்கப் போகிறேன்? எந்நாளும் என் மனத்துக்கினிய நண்பன் நீ தான்! நீ தான்!



சரி, புதிருக்கு வருவோம்!
1. பொன்னார் மேனியனே என்ற பாடல், கல்கியின் பொன்னியின் செல்வனில், பல இடங்களில் வரும்! எந்தக் கதாபாத்திரத்தின் அறிமுகப் படலத்தில் இந்தப் பாடல் வருகிறது?

2. இந்த "மழபாடி மறந்தனையோ" கதையும் பொன்னியின் செல்வனில் வரும். யார் யாருக்குச் சொல்வாங்க? எந்தக் கட்டத்தில்?

திருமழபாடியை ஒரு ரவுண்டு வரலாமா?
பாடி என்றால் தங்குமிடம்; பாசறை!
கங்கபாடி-ன்னு ஊரு இருக்குல்ல? அதே போல், மழபாடி = மழவர்கள் தங்கும் பாடி! காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று! திருவையாற்றுக்கு அருகில்!
இறைவன்: வயிரத் தூண் நாதர், வஜ்ர ஸ்தம்ப ஈஸ்வரர் இறைவி: அழகம்மை
நந்திகேஸ்வரர் திருமணம் நிகழ்ந்த தலம்! சுயசை என்னும் நங்கை நல்லாளுக்கும் நந்தியம்பெருமானுக்கும் இன்றும் பங்குனி மாதம் திருமண விழா எடுப்பிக்கிறார்கள்!

பாடலுக்கு நன்றி: பாலராஜன் கீதா (பாகீ இன்னும் சில தலங்களுக்கு தேவாரப் பாடல் ஒலிப்பத்திகளை அனுப்பியுள்ளார்) ; சில படங்களுக்கு நன்றி: சதீஷ் குமார்


திருமழபாடி ஆலயம்

பதிகத்தைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?

நண்பன் நம்மிடம் கோபித்துக் கொண்டால் முதலில் என்ன செய்வோம்?
மன்னிச்சோக்கோ என்று முதலில் கெஞ்சல்!
சூடு தணிந்தவுடன், அவனையே கலாய்த்து சிறு கொஞ்சல்!
அதே தான் இங்கும் நடக்கிறது!

அன்னே......உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?
அன்னே = அன்னையே, அம்மா, அம்மே!
சில நெருங்கிய நண்பர்கள் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது பார்த்திருக்கலாம்; "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்றும் பேசிக்குவாங்க! நண்பன் எப்படி அம்மா ஆக முடியும்? ஆக முடியுமா?

வீட்டுல அன்னிக்கி சங்கரா மீன் வறுவல்; மதியம் சாப்பிட்டாச்சி; இன்னும் ரெண்டு மூனு துண்டு தான் பாக்கி இருக்கு! அப்பாவுக்கு ஒரு துண்டை வைத்த அம்மா, தனக்கு மட்டும் படக்கென்று மோர் ஊத்திக்கறாங்க!
அட, என்னாம்மா-ன்னு கேட்டா, ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லுறாங்க! அப்படியே ரெண்டு மீன் துண்டையும் பையனுக்கு வச்சிடறாங்க! நீ ஒன்னு வச்சிக்கோம்மா-ன்னு சொன்னா, அடடா நான் மோர் ஊத்திக்கிட்டேனே! சரி, நீயே சாப்பிடுப்பா-ன்னு ஒரு பொய் நாடகம்! இதே மாதிரி நாடகங்கள் சில நெருங்கிய நட்பிலும் உண்டு! :)

அம்மாவிடம் ஆயிரம் சண்டை போட்டாலும், திரும்பியும் போயி அங்கேயே தான் நிற்போம்! பேசிக்க மாட்டோம், ஆனால் ஏதோ ஒரு இழை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்!
நாம தப்பே செஞ்சாலும் கூட, அம்மா மட்டும் நம் பக்கம் தான் இருக்கணும் என்கிற ஒரு கண்மூடித்தனமான எண்ணம்! இது போல சில நட்பும் உண்டு!
இவர்கள் தான் "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்று பேசிக் கொள்பவர்கள் :)

சுந்தரர்-ஈசன் நட்பும் அப்படித் தான்! ஈசனையே பொய் சாட்சி சொல்ல அழைப்பார்! அதான் அன்னே! அம்மா! என்று நண்பனை விளிக்கிறார்!
டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே, உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே!


ஓதுவா மூர்த்திகள், தேவாரம் இசைக்கிறார்கள்!

பொன்+ஆர்+மேனியனே = ஆர்-ன்னா அழகு!
சிவபிரான் தகதக என்று காய்ச்சின பொன் நிறத்தைக் கொண்டவன்! செம்பொன் மேனி என்பார்கள்! அதாச்சும் சிவப்பாகவும் இருக்கும், பொன் போலவும் இருக்கும்!

காய்ச்சின பொன்னை எப்படி வேண்டுமானாலும் உருக்கி விடலாம்! எந்த வடிவத்திலும் தட்டி நகை செய்து விடலாம்!
அதே போல் சிவபிரானைத் தவத்தால் உருக்கி விடலாம்! வரப் பிரசாதி! பக்த கோலாகலன்! தவத்தில் சோதனைகள் கொடுத்தாலும், உருகி விடுவதில் எளியன்! வரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவான்!

அதனால் தான் அசுரர்கள் சிவபிரானை நோக்கியே பெரும்பாலும் தவம் இருப்பார்கள்! மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது! :)

புலித்தோலை அரைக்கு அசைத்து = அரை என்றால் இடை, இடுப்பு
(அரை-ஞாண் கயிறு-ன்னு சொல்றோம்-ல! எத்தினி பேரு இந்தக் காலத்திலும் அரைஞாண் கயிறு கட்டிக்கிட்டு இருக்கீங்க? கையைத் தூக்குங்க! :)

புலித்தோலை இடையில் அசைத்துக் கொண்டு உள்ளான்! ஒழுங்கா மடிப்பு எல்லாம் வச்சிக் கட்டினா, அதுக்குப் பேரு கட்டுதல்! ஆனால் இங்கோ பரபரவென்று புலித்தோலை ஒரு இழுத்து இழுத்து இருக்கான்; அம்புட்டு தான்! அதனால் அசைத்து என்கிறார்!

கர்மங்களைச் செய்தாலே போதும்; இறைவனைத் தனியாகப் பணிய எல்லாம் தேவையில்லை என்ற கொள்கை உடையவர்கள் கர்ம மீமாம்சை ரிஷிகள்!
தாருகா வனத்தில் அவர்கள் சிவபெருமானை எதிர்த்து ஆபிசார ஹோமம் என்ற ஒன்றினைச் செய்கிறார்கள்! அப்போது ஏவி விடப்பட்டவை தான் புலி, மான் போன்றன! புலியைக் கொன்று அதன் தோலை அரைக்கு அசைத்துள்ளான் ஈசன்!
மின்னார் செஞ்சடை மேல், மிளிர் கொன்றை அணிந்தவனே =
செம்மையாக இழுத்துக் கட்டப்பட்ட ஜடாமுடி! அது மின்னுகிறது! எதனால்? சந்திர மெளலி அல்லவா? கறையில்லாப் பிறையால் மின்னுகிறது! அதான் மின்னார் செஞ்சடை!

சடையின் மேல் கொன்றை மலர் சூடி உள்ளான்! கொன்றை மலர் ஈசனுக்கு மிகவும் உகந்த மலர்! மஞ்சள் நிறத்தில் அதுவும் தததக-ன்னு மின்னும்!
தாழம்பூ அவனுக்கு ஆகவே ஆகாது! கொன்றையோ அவனை விட்டுப் போகவே போகாது!
கொன்றை பற்றி யோகன் அய்யா இட்ட சிறு பதிவு இங்கே!

மன்னே, மாமணியே, மழபாடி உள் மாணிக்கமே =
மன்னுதல் = நிலைத்து இருத்தல்! மன்னும் இமயமலை என்பார்களே, அது மாதிரி!
மற்ற செல்வங்கள் எல்லாம் செல்வம், செல்வம், செல்வோம்...என்று சென்று விடும்!
ஆனால் சிவச்செல்வம் எப்போதும் மன்னி நிற்கும்!

விபூதி என்பதற்கே செல்வம் என்று தான் பொருள்!
நித்ய விபூதி என்று வைணவமும் விபூதியைப் பேசும்! அது போல, நட்புச் செல்வமும் என்றும் நிலைத்து இருக்க வேண்டித் தான் மன்னே என்கிறார்!

டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே! உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?


உயிர் நண்பர்கள் யாரேனும் பிரிந்து இருந்தால், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ, இந்தத் தோழமைத் திருப்பதிகத்தை அடியேன் வாசித்து அர்ப்பணிக்கிறேன்!

அடுத்த திங்கட்கிழமை, ஒரு வாசகத்துக்கும் உருகாதவர்கள், திருவாசகத்துக்கு உருகப் போறோம்! அதுக்கு முன்னாடி பொன்னியின் செல்வன் புதிருக்குப் பதில் சொல்லுங்க மக்கா! :)

Sunday, August 3, 2008

அப்பர் தேவாரம்: கடவுளைத் தம்பதிகளாகத் தான் துதிக்கணுமா?

பல வீட்டு விசேடங்களில் தம்பதி சமேதரா வாங்க-ன்னு சொல்லுவாய்ங்க! ஏன்? சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்! இல்லீன்னா, "sorry, you are disqualified"- தான்! ஏன்??
வீட்டுல தங்கமணி வெளியூர் போயிருக்காங்களா? அப்போ நான் மட்டும் தனியா இதைச் செய்யக் கூடாதா? அட, என்னை விட்டுவிட்டு இப்போ தம்பியும் அவன் மனைவியையும் மனையில் உட்காரச் சொல்றாங்களே! என்னாங்க இது அநியாயமா இருக்கு? :)

சென்ற பதிவில் சம்பந்தரின் முதல் பாட்டைப் பார்த்தோம். இன்று அப்பரின் (கிட்டத்தட்ட) இறுதிப் பாட்டை, அவர் உறுதிப் பாட்டைப் பார்ப்போம், வாங்க!

அப்பர் சுவாமிகள் தொண்டில் பழுத்த சைவர்!
வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்! திருநாவுக்கரசர், அப்பர், வாகீசர், தருமசேனர் (சமணர் தந்தது) போன்ற பல பெயர்கள் அவருக்கு!
தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு!
அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன?

சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்!
கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை!
அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

இந்தக் காலத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-ன்னு பல பேர் செல்கிறார்கள்; அவர்களைக் கேட்டால் முதலில் சொல்லுவது, "எக்காரணம் கொண்டும் தனியாகச் செல்லாதீர்கள்" என்பது தான்! - இத்தனைக்கும் பேருந்து, ஹெலிகாப்டர், உணவு கட்டித் தர ஆட்கள், ராணுவம் என்று சகல வசதிகள் இருக்கும் போதே நிலைமை இப்படி! ஆனால் அந்தக் காலத்தில் அப்பரின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும்
கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும்,
மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும்,
உடம்பு அடங்கவும், ஊன் கெடவும்,
சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்....
என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!


பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! இது குறித்து அடியேன் பல முறை யோசித்தது உண்டு!
வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, ஆனை இடறியது, கடலில் போட்டது....பின்பு உழவாரப் பணி என்று ஆரம்பம் தொட்டே இவருக்கு மட்டும் இப்படி உடலால் பாடுபடுதல் ராசியானது போலும்!

கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்!
அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்!
அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்!
"மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்!" - நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை!

"அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!"

"அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?"
வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்!

"அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா?
இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்!"

திருவையாற்றில், அப்பர் குளம்

அப்பர் மான சரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன! உடல் சிவ மங்களமாய் மின்னியது!
வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்!
காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின!


மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!

காந்தாரம் என்னும் அழகிய தமிழ்ப் பண்ணில் இந்தப் பாட்டு! அடியேன் குரலில் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)
Gabcast! MadhaviPanthal #41



இதாங்க எளிமையான பொருள்:
தலையில் கங்கை, தலையில் பிறை, தலையில் கண்ணி என்னும் தலைமாலை!
இவனை இமவான் புதல்வியான பார்வதியோடு அடியேன் பாடினேன்!
கால் சுவடே படாமல் எப்படி இங்கு வந்தேன்? ஆகா, இது திருவையாறு என்னும் தலம் அல்லவா!
பூவும், நீரும் சுமந்து கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள் அடியார்கள்! அவர்கள் முன் புக, அடியேன் பின் புகுவேன்!

காதல் செய்யும் பிறவிகள் எல்லாம் இணை இணையாய், ஜோடி ஜோடியாய் வருகின்றனவே!
அதோ...இறுதியில்...பிடியும், களிறுமாய் (பெண் யானையும, ஆண் யானையுமாய்) அசைந்து அசைந்து...ஈஸ்வரியும், ஈசனும்!
கண்டாலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றையும் இதோ காண்கிறேனே!
கண்டேன் அவர் திருப்பாதம்!!!

மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க,
நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க,
நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க,
மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்...அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!


பாடலைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)
மாதர், பிறை, கண்ணி = மூன்றையும் தலையில் காண்கிறார் முதலில்!
திருப்பாதம் காண்கிறார் முடிவில்! கேசாதி பாத சேவை என்பார்கள்! முடி-அடி சேவை!

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி =
கண்ணி என்பது ஒரு விதமான மாலை தொடுப்பு! ஒத்தை ஒத்தையாத் தான் கட்டுவாங்க! வீட்டில் அம்மாவோ இல்லை மனைவியோ தொடுக்கும் போது பார்க்கலாம்!
(இப்பல்லாம் யாராச்சும் பூ தொடுக்கறாங்களாப்பா? இல்லை flower gripping techniques-ன்னு அதுக்கும் online tutoring இருக்கா? :))

பொதுவாகப், பூவை ரெண்டு ரெண்டா தான் எடுத்துத் தொடுப்பாய்ங்க! ஒரு காம்பு, இன்னொரு காம்பின் மேல் படும்! வாழை நார் இரண்டையும் கட்ட, பூக்கள் வெளியில் இரு பக்கமும் துருத்திக் கிட்டு நிக்கும்! பூ இரு பக்கமும் இருந்தால் தான் மாலைக்கு அழகு!

ஆனால் கண்ணியில் அப்படி இல்லை! ஒரு பக்கம் மட்டும் காம்பு சேரும்படி கட்டுவாங்க! அதனால் பொதுவா கண்ணியைத் தலைக்கு மட்டுமே சூடுவார்கள்! பராபரக்-கண்ணி, கண்ணி-நுண்-சிறுத்தாம்பு எல்லாம் கண்ணி என்று வரும் தமிழ் நூல்கள்!

கண்ணி, மாலை, தொங்கல், தொடையல் எல்லாம் விதம் விதமான மாலை அமைப்புகள்!
இன்னிக்கி சூடிக் கொடுத்தாள் ஆண்டாளின் பிறந்த நாள்! திரு-ஆடிப் பூரம்! கோதையின் நாள் அதுவுமா, மாலை விளக்கம் தானா வந்திரிச்சி பாருங்க! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! :)


போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன் =
போது=அரும்பு மலர்! முழுக்க விரியாத மலர்! அதாச்சும் வண்டின் எச்சில் படும் முன்னரே மலரைப் பறிப்பது தான் பூசைக்கு வழக்கம்! அரும்பாகவே மாலை தொடுத்து விடுவார்கள்! சார்த்தும் போது, அது அழகாய் மலர்ந்து இருக்கும்!

ஈசனுக்கு அரும்பும், அபிடேக நீரும் கொண்டு செல்கின்றார்கள் அடியவர்கள்! அடியவர் முன் புக, அடியேன் பின் புகுவேன்! இது தான் பக்திக்கு அடிப்படை! தன்னையும், தன் டாம்பீகத்தையும் முன்னிறுத்திப் புகுவது இறைவனுக்குப் பிடிக்காத ஒன்று! ஏன்? இங்கே!

யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது =
வட கயிலை அடிவாரத்தில் இருந்து, கால் சுவடே படாமல், இதோ திருவையாற்றுக்கு வந்தாகி விட்டது!
திருவையாறு மிகப் பழமையான சிவத்தலம்!
இறைவன்: பஞ்ச-நதீஸ்வரர் = ஐயாறப்பர்!
இறைவி: தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி!


திருவையாறு மொத்தம் ஐந்து ஆறுகள் பாயும் தலம்! = காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு!
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் இசை ஆறும் இப்போது பாய்கிறது அல்லவா? ஐயாறு, ஆறாறு ஆகி விட்டது! :)


திருவையாறு, அறம் வளர்த்த நாயகி-ஐயாறப்பர் ஆலயம்

காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!=
களிறு=ஆண் யானை=களித்திருப்பதால் களிறு!
பிடி=பெண் யானை=களிறைத் தன் பிடியில் பிடித்து வைத்திருப்பதால் பிடி! :)
இப்படி இறைவனே காதல் மயமாகத் தான் காட்சி அளிக்கின்றான்! சிவ-சக்தி தத்துவமாய் நிற்பதால் தான் சிருஷ்டி-சங்கார ரகசியங்கள்!

சக்தி இல்லையேல் சிவம் என்னும் பதமே இல்லை! அன்னை இல்லையேல் அப்பன் என்னும் பதமே இல்லை!
மான், மயில், கிளி, அன்னம், மனிதர், என்று ஜோடி ஜோடியாக வருவதைப் பார்க்கிறார் அப்பர்! இறுதியில் பிடியோடு, களிறுமாய், அம்மையும் அப்பனும் ஜோடியாகவே வருகிறார்கள்!

பதிவின் முதல் பத்தியில் கேட்ட கேள்விக்கு, //சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்!// இப்போது விடை சொல்லப்போவதில்லை! அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!:)

கண்டேன் அவர் திருப்பாதம்! = முக்தி நிலையில் இருந்த அப்பருக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியுதாம்? மோட்சத்தைத் தருவது எது? ஒன்றே ஒன்று தானே! எம்பெருமானின் திருவடி! = கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!! = கண்டாலும் அறிய முடியாதது எது?
அதான் கண்டாச்சே! கண்டால், அறிந்த மாதிரி தானே-ன்னு கேட்டா, இல்லை! கண்டாலும் அறிவுக்கு எட்டாது! அன்புக்கு ஒட்டும்!
கண்டு, அறியாதன "கண்டேன்"-ன்னு தான் சொல்லுறார்! கண்டு, அறியாதன "அறிந்தேன்"-ன்னு சொல்லலை பாருங்க!

திருவடிகள் அறிவுக்கு எட்டுமா? ...அன்புக்கு ஒட்டுமா?
கண்டு அறியாதன "கண்டேன்"! அவ்வளவு தான்! நாடினேன்! நாடி நான், "கண்டேன்", "கண்டு" கொண்டேன்! சிவ சிவ! திருச்சிற்றம்பலம்!!

(அடுத்த திங்கட்கிழமை, சுந்தர நண்பனின் தேவாரத்தைப் பார்ப்போமா?....)